அப்தாப்புக்கு பயங்கர காய்ச்சல்.. உண்மைக் கண்டறியும் டெஸ்டுக்கு முன் நடந்த சம்பவம்.. போலீஸார் அப்செட்
டெல்லி: டெல்லியில் இளம்பெண் சாரதாவை கொடூரமாக முறையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த அப்தாப் அமீனுக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் இன்று அவருக்கு நடத்தப்படவிருந்த உண்மைக் கண்டறியும் சோதனை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
சாரதாவை கொலை செய்தது அப்தாப் தான் என போலீஸார் நிரூபித்த நிலையில், இதற்கு முன்பு இதுபோன்று யாரையாவது அப்தாப் கொலை செய்திருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளவே இந்த உண்மைக் கண்டறியும் சோதனையை போலீஸார் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்த உண்மைக் கண்டறியும் சோதனையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் டெல்லி போலீஸார் கருதி வந்த நிலையில், சோதனை தள்ளி வைக்கப்பட்டதால் போலீஸார் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
டக்கென தலைக்கேறிய கோபம்.. சிறு சண்டைக்கு காதலியை 35 பீஸாக வெட்டிய அப்தாப்! அதிர வைக்கும் வாக்குமூலம்
சீரியல் கில்லரா - போலீஸுக்கு வந்த சந்தேகம்
டெல்லியில் தன்னுடன் லிவிங் உறவில் வசித்து வந்த காதலி சாரதாவை கொடூரமான முறையில் கொலை செய்ததாக அப்தாப் அமீன் (26) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சாரதாவை கொலை செய்ததுடன், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை 3 மாதங்களாக அப்தாப் அப்புறப்படுத்தி வந்ததை அறிந்த போலீஸாரே சற்று அரண்டு தான் போயுள்ளனர். மேலும், ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சாரதாவின் தலையுடன் அப்தாப் பேசி வந்ததும், சாரதாவின் உடல் ஃப்ரிட்ஜில் இருக்கும் போதே பல பெண்களை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்ததும் அவர் ஒரு சீரியல் கில்லராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீஸாருக்கு ஏற்படுத்தியது.
"முதல் கொலையாக இருக்காது"..
அப்தாப்பிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, அவருக்கு தெரியாமலேயே ரகசிய கேமரா மூலமாக அவரது முக பாவனைகள், கண் அசைவுகள் ஆகியவற்றை மனநல நிபுணர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது ஏதோ பெரிய விஷயத்தை அப்தாப்பின் கண்கள் மறைப்பதாக மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இதுபோன்ற கொடூர கொலையை செய்தவர்கள் அதன் பின்னர், குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள். ஆனால், அப்தாப்போ மிகவும் சகஜமான மனநிலையில் இருந்தது வந்ததும் மனநல மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்தக் கொலை அப்தாப்பின் முதல் கொலையாக இருக்காது என்பதே மனநல மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. போலீஸாரும் அப்தாப் எதையோ மறைப்பதை உணர்ந்தனர்.
உண்மைக் கண்டறியும் சோதனை..
இதன் தொடர்ச்சியாக, அப்தாப்புக்கு உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது இந்த உண்மைக் கண்டறியும் சோதனையின் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும், இதற்கு முன்பு அப்தாப் யாரையாவது கொலை செய்திருந்தால் அதுவும் தெரியவந்துவிடும் எனவும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனால் இந்த உண்மைக் கண்டறியும் சோதனையை போலீஸார் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
போலீஸார் 'அப்செட்'..
இந்நிலையில் அப்தாப்புக்கு இன்றுதான் உண்மைக் கண்டறியும் சோதனை நடைபெறுவதாக இருந்தது. இதற்கு முன்பாக அவரிடம் முதல்கட்ட 'பாலிகிராப்' சோதனையையும் போலீஸார் நடத்தினர். இதில், அப்தாப் சில உண்மைகளை மறைப்பது தெரியவந்தது. இந்த சூழலில், முழுமையான உண்மைக் கண்டறியும் சோதனைக்காக அப்தாப்பை போலீஸார் இன்று அழைத்து சென்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடல்நலக்குறைவு ஏதும் இருந்தால் உண்மைக் கண்டரியும் சோதனை நடத்தக்கூடாது என்பது விதி. இதன் காரணமாக, கடைசி நேரத்தில் அப்தாப்புக்கு நடத்தப்படவிருந்த உண்மைக் கண்டறியும் சோதனை தள்ளி வைக்கப்பட்டது. இந்த சோதனை தள்ளி வைக்கப்பட்டதால் டெல்லி போலீஸார் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.