சென்னை போட்ட விதை.. 500 வழக்கு.. மக்களுக்காக அதிகாரத்தை எதிர்த்த போராளி.. யார் இந்த பிரஷாந்த் பூஷண்?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைமை நீதிபதிகளுக்கு எதிராக பேசி, சட்டத்துறையை ஆட்டம் காண வைத்துள்ளார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண். ஒரு அவமதிப்பு வழக்கு மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பிரஷாந்த் பூஷணுக்கு பின் பெரிய சட்ட போராட்ட வரலாறு இருக்கிறது.. அந்த வரலாறு சென்னையில் தொடங்கியது!
Recommended Video
உச்ச நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் விதமாக சின்ன விஷயம் பேசினால் கூட, அவமதிப்பு வழக்கும் பாயும் சூழ்நிலைதான் தற்போது இந்தியாவில் நிலவி வருகிறது. அவமதிப்பு கருத்துக்களை அவ்வளவு கறாராக உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. கடந்த 2 வருடங்களில் மட்டும் பல மூத்த வழக்கறிஞர்கள் இதனால் அபராதத்தை சந்தித்து இருக்கிறார்கள்.
இவ்வளவு கட்டுப்பாடான சூழ்நிலையிலும் கூட... ஒரு மூத்த வழக்கறிஞர் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி தனது கேள்விகளை, விமர்சனங்களை வைத்து வருகிறார். நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளை தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.. அவர்தான் பிரஷாந்த் பூஷண்!

எத்தனை வருடம்
சட்டதுறையில் 30 வருட அனுபவம் கொண்ட பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை நோக்கி எழுப்பிய சில கேள்விகள்தான் இப்போது அவர் மீது போடப்பட்டு இருக்கும் அவமதிப்பு வழக்கிற்கு காரணம். தலைமை நீதிபதி போப்டே சொகுசு பைக்கில் இருந்ததை கிண்டல் செய்ததற்காகவும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 3 பேரின் நிர்வாகம் மற்றும் தீர்ப்பை கேள்வி எழுப்பியதற்காகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டு, அதில்தான் தற்போது தீர்ப்பு வந்து இருக்கிறது.

இதற்கு முன்பு
பிரஷாந்த் பூஷண் மீது இப்போது பாய்ந்த வழக்கிற்கு பின், மேற்சொன்ன விஷயங்கள் மட்டும் காரணம் இல்லை. பல வருடங்களாக, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததும் காரணம் ஆகும். 2009லேயே உச்ச நீதிமன்றத்தின் 8 தலைமை நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று அழைத்தவர்தான் பிரஷாந்த் பூஷண். தீபக் மிஸ்ரா தொடங்கி போப்டே வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பலருடன் இவர் மோதல் போக்கை கடைப்பிடித்து இருக்கிறார்.

சண்டை போட்டார்
2017 நவம்பரில் மருத்துவ கல்லூரி வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடன் சண்டை போட்டுவிட்டு, மன்றத்தில் இருந்து கோபமாக பாதியில் வெளியேறிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது. அதற்கு முன்பே பலமுறை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் உடன், விசாரணையின் போது சண்டை போட்டு இருக்கிறார் பூஷண். பலமுறை அவமதிப்பு வழக்கின் வீட்டு வாசல் படியை மிதித்தவர்தான் பிரஷாந்த் பூஷண்.

தொடங்கியது
இவரை வழக்கறிஞர் என்று கூறுவதை விட, ''லா ஆக்டிவிஸ்ட் - சட்ட போராளி'' என்று அழைப்பதே சரியானது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் கூறுகிறார்கள். 1998ல் இவர் இந்த சட்ட ரீதியான போராட்டங்களை தொடங்கினார். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷனின் மகனான இவர் தனது அப்பாவிடம் இருந்தே சட்டத்தை கற்றுக்கொண்டார். அப்போது தனது சக வழக்கறிஞர்கள் உடன் சேர்ந்து நீதிபதி எம்எம் புஞ்சியை நீக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தினார். 25 ராஜ்ய சபா எம்பிக்களின் கடிதங்களை கூட இவர் பெற்று இருக்கிறார். ஆம்., தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் நீதிபதிகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்!

ஆர்டிஐ எப்படி
எந்த அளவிற்கு இவர் நீதிபதிகள் மீது கோபம் கொண்டவர் என்றால், நீதிபதிகளின் சொத்து விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். ஆம் 2009ல் எஸ்சி அகர்வால் என்பவர் தொடுத்த வழக்கில் இவர்தான் வாதாடியது. நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அதனால் அவர்களின் சொத்து விவரங்களை ஆர்டிஐ கீழே கொண்டு வர வேண்டும் என்று வாதாடி, அதில் வெற்றியும் பெற்றார். பிடி தினகரன் என்ற நீதிபதிக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் கொடுத்து 2011ல் அவரின் ராஜினாமாவிற்கு காரணமாக இருந்தார்.

அரசியல் தலைவர்கள் எப்படி
நீதிபதிகள் மட்டுமல்ல அரசியல் தலைவர்ளுக்கு எதிராகவும் இவர் செயல்பட்டு இருக்கிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனாக இருந்தாலும் 2012 வரை அரசியல் தலைவர்கள் உடன் நெருக்கம் காட்டவே இல்லை. ஆம் ஆத்மி கட்சியை தொடங்கும் வரை இவர் பெரிய அளவில் அரசியல் பக்கம் தலைவைத்துபடுக்கவில்லை. ஆம் ஆத்மியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என்று எல்லா தரப்பையும் இவர் எதிர்த்து இருக்கிறார்.

என்ன வழக்கு
2ஜி வழக்கு, நீராராடியா டேப், நிலக்கரி முறைகேடு வழக்கு என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர் அதிரடி வாதங்களை வைத்து இருக்கிறார். அதேபோல் ரபேல் வழக்கிலும் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கிலும் கூட இவர் வாதிட்டு இருக்கிறார். ''ஊழலுக்கு எதிரான இந்தியா'' என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

பாஜக எப்படி
காங்கிரசை எந்த அளவிற்கு எதிர்த்தாரோ அந்த அளவிற்கு பாஜகவையும் இவர் எதிர்த்து உள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து இவர் கூறிய கருத்துக்கள் பல மோடிக்கு எதிராக திரும்பியது. காஷ்மீரில் பாஜகவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்துள்ளார், நக்சல்கள் போலி என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள், குஜராத்தில் கொடூர ஆட்சி நடக்கிறது, மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று தொடர் புகார்களை பாஜக மீது வைத்து இருக்கிறார். பூஷண் எப்போதும் தனது சொந்த கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்.'

வெளியேற்றம்
அதனால்தான் என்னவோ 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் சண்டை போட்டுகொண்டு அதில் இருந்தே வெளியேறினார். 2ஜி வழக்கில் டாட்டா, அணில் அம்பானி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கூறி கோடீஸ்வரர்களையும் கூட இவர் விட்டுவைக்கவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆதிக்கம் என்பது எந்த உருவத்தில் வந்தாலும் அதை பிரஷாந்த் பூஷன் எதிர்த்து இருக்கிறார். மதம் , ஊழல், பணம், அதிகாரம் என்று எந்த வகையில் அநியாயம் நிகழ்த்தப்பட்டாலும் அதை பிரஷாந்த் பூஷண் எதிர்த்து இருக்கிறார்.

500 பொது நல வழக்கு
எப்போதும் இவர் மக்களுக்காக அதிகாரங்களை எதிர்த்து இருக்கிறார். 500 பொது நல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் போட்ட பெருமைக்கு உரியவர் பூஷண். 1983ல் தனது முதல் பொதுநல வழக்கை டூன் வாலி சுரங்க வழக்கில் போட்டவர் பிரஷாந்த் பூஷண். அப்போதில் இருந்து இப்போது வரை இவர் வாழ்க்கை வழக்குகளால் நிரம்பி உள்ளது. தமிழக விவசாயிகள் வழக்கு தொடங்கி காஷ்மீர் பிரச்சனை வரை அதிகாரத்தை எதிர்த்து மக்கள் பக்கம் நின்ற ஒரே சட்ட போராளி பிரஷாந்த் பூஷண்தான்.. அதனால்தான் இவருக்கு தண்டனை கொடுக்க உச்ச நீதிமன்றமே யோசித்தது.

சென்னை எப்படி
சென்னையில் ஐஐடியில்தான் இவர் படித்தார், அங்கு தொழில்நுட்ப படிப்பிற்கு இடையிலும் ஓய்வு நேரத்தில் இவர் சட்டம் குறித்தும் , மக்கள் போராட்டம் குறித்தும் கற்று இருக்கிறார். அங்கு இவருக்கு சட்ட ஆசை வரவே, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பிஎஸ்சி படித்துள்ளார். அதன்பின் அமெரிக்காவிற்கு தத்துவவியல் படிக்க சென்றுள்ளார். அங்கேயும் படிப்பை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பி சட்டம் படித்து 1983ல் வழக்கறிஞர் ஆகியுள்ளார்... அப்போது தொடங்கிய பயணம் இப்போது சட்ட கோபுரங்களை அதிர வைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications