பாஜகவின் ஒரு அங்கமாகவே மாறிய தேர்தல் ஆணையம்.. அனைத்து உதவிகளையும் செய்தது.. பிரஷாந்த் கிஷோர் தாக்கு
டெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஒரு அங்கமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்றும் பாஜகவின் அழுத்தம் காரணமாகவே எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டதாகவும் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
இன்று தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 210க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கபோவது உறுதியாகியுள்ளது.

பாஜக 77 முன்னிலை
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஒட்டுமொத்த அமைச்சரவையே மேற்கு வங்கத்தில் இறங்கி, தீவிரமாக பிரசாரம் செய்தது. இருப்பினும் பாஜக 77 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

பிரஷாந்த் கிஷோர் விலகல்
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரஷாந்த் கிஷோர் தான் பாஜக 100+ இடங்களில் வென்றால் தேர்தல் ஆலோசகர் பணியில் இருந்து விலகுவதாக சவால் விடுத்தார். பாஜக தற்போது 100 இடங்களை கடக்கவில்லை என்ற போதிலும், தேர்தல் ஆலோசகர் பணயில் இருந்து விலகுவதாக பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவின் ஒரு அங்கமாக மாறிய தேர்தல் ஆணையம்
இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தலில் பாஜகவின் ஒரு அங்கமாகவே செயல்பட்டது. தேர்தல் ஆணையம் பாஜகவை விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதி அளித்தது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அங்கம் போலவே செயல்பட்டது. அவர்கள் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டது அப்பட்டமாகவே தெரிந்தது. மேற்கு வங்கத்தி்ல் பாஜக வெற்றிக்கு தேர்தல் ஆணையம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தது.

போலியான பிம்பம்
மேற்கு வங்கத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். 190 இடங்களில் வெல்கிறோமா அல்லது 200 தொகுதிகளில் வெல்கிறோமா என்பது விஷயம் அல்ல. மேற்கு வங்கத்தில் தான் வெற்றி பெறுவதாக பாஜக போலியான பிம்பத்தை பிரசாரம் மூலம் உருவாக்கியது. பாஜக ஒரு வல்லமைமிக்க கட்சி. தொடர்ந்து அது அப்படிதான் இருக்கும். ஆனால் பலரும் எதிர்பார்த்ததை விட திரிணாமுல் அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை எங்களிடம் இருந்தது. இதனால்தான் நிச்சம் வெல்வோம் என வெளிப்படையாக அறிவித்தேன்.

பிளவுபடுத்தும் பிரசாரம்
முதலில் பாஜக மம்தா பானர்ஜியை விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டது. அது பெரியளவு பலன் தரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் வங்கத்து மக்களை பிளவு படுத்தும் பணிகளில் இறங்க தொடங்கினர். இதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசியல் ஆலோசரகராக பணியாற்றி இத்தனை ஆண்டுகளில் இந்தளவு மத ரீதியிலான பிரிவினை பிரசாரம் நடந்து நான் கண்டதில்லை. 'ஜெய் ஸ்ரீ ராம்' தான் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் மையமாக இருந்தது.

பாஜக வீழ்த்த முடியாத கட்சி அல்ல
இந்தத் தேர்தல் எதிர்கட்சிகளுக்கு ஒன்றை தெளிவாக விளக்குகிறது. பாஜக ஒன்றும் விழ்த்தவே முடியாத கட்சி இல்லை. சரியான முறையில் செயல்பட்டால் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும். மம்தா பானர்ஜி காயமடைந்தபோது, நாங்கள் அச்சம் ஏற்பட்டது உண்மைதான். ஏனென்றால், மம்தாவை மட்டுமே நாங்கள் பிரசாரத்திற்கு முழுமையாக நம்பியிருந்தோம். மம்தா ஒரே இடத்தில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தால். நிச்சயம் நிலைமை இக்கட்டாக மாறியிருக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்து நேரடி அரசியல் களம்?
வரும் காலங்களில் அரசயலில் களமிறங்குவது குறித்து எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் வாழ்க்கையில் நான் ஏற்கனவே ஒரு முறை தோல்வியடைந்துவிட்டேன். அப்போது கற்றுக்கொண்ட பாடங்களை நான் திரும்பிப் பார்க்க வேண்டும். கொஞ்ச காலம் அசாம் சென்று டீ விவசாயத்தில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்" என்றும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications