பிரதிமா பௌமிக்.... திரிபுராவை சேர்ந்தவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்
டெல்லி: மத்திய அமைச்சரவையில் திரிபுரா எம்.பி.யான பிரதிமா பௌமிக் இடம்பெற்றுள்ளார். திரிபுராவில் பிறந்த ஒருவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
திரிபுரா மாநிலமானது இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை கூண்டோடு பாஜக வளைத்தது.
இதனால் 2018 சட்டசபை தேர்தலில் பாஜக, திரிபுராவில் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் உட்கட்சி மோதல்களால் திரிபுரா பாஜக அரசுக்கு கடும் நெருகக்டி ஏற்பட்டுள்ளது. அதுவும் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் மமதா பானர்ஜி ஆட்சியை பிடித்ததால் திரிபுரா பாஜக எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாக மிரட்டல் விடுத்தனர். திரிபுராவில் வங்கமொழி பேசுவோர் கணிசமாக உள்ளனர்.
அத்துடன் திரிபுராவில் பழங்குடி வாக்காளர்கள், ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் திரிபுராவில் இருந்து முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வான பிரதிமா பெளமிக், மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். திரிபுராவில் பிறந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

அதேநேரத்தில் திரிபுரா எம்.பி.யாக இருந்த பிற மாநிலத்தவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இந்திரா காந்தி அமைச்சரவையில் திரிகுண சென், கல்வி அமைச்சராக இருந்தார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்; திரிபுராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேற்கு திரிபுரா லோக்சபா தொகுதியில் வென்ற அஸ்ஸாமை சேர்ந்த சந்தோஷ் மோகன் தேவ், ராஜீவ்காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 2-வது பெண் என்ற பெருமையும் பிரதிமா பெளமிக் பெற்றுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் அஸ்ஸாமின் பிஜயா சக்கரவர்த்தி இடம்பெற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications