“பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது” நாட்டு மக்களிடையே.. குடியரசுத் தலைவர் முர்மு உரை
டெல்லி: குடியரசுத் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். உரையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். குறிப்பாக மகளிர் உலகக்கோப்பை, பார்வையற்றோர் மகளிர் உலகக்கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரை
குடியரசுத் தலைவரின் உரை இரவு 7 மணி முதல் ஒளிபரப்பப்பட்டது. ஆகாஷ்வாணியின் தேசிய நெட்வொர்க் முழுவதும் இந்த உரை ஒலிபரப்பானது. தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தி மொழியிலும் அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்பட்டது.
தூர்தர்ஷனில் இந்தி, ஆங்கில ஒளிபரப்பிற்குப் பிறகு, அதன் பிராந்திய அலைவரிசைகளில் மாநில மொழிகளில் உரை ஒலிபரப்பானது. மேலும், ஆகாஷ்வாணியின் பிராந்திய நெட்வொர்க்குகளில் இரவு 9.30 மணி முதல் அந்தந்த மாநில மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒலிபரப்பப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல்
குடியரசு தினப் பெருவிழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. உலகின் மிகப்பெரிய குடியரசின் அடிப்படை ஆவணம் நமது அரசியலமைப்புச் சட்டமே என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். தேசத்தை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலை குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்.
தேச பக்தி
கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அவரது 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை அவர் மேற்கோளிட்டு பேசினார். பாரத அன்னையை போற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்கள் கடந்த நவம்பர் 7 முதல் நடைபெறுவதையும், இப்பாடல் ஒவ்வொருவர் மனதிலும் தேசபக்தியை விதைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயுதப்படைகள்
நமது துடிப்பான குடியரசை வலுப்படுத்துவதில் ஆயுதப் படைகளுக்கும் காவல்துறைக்கும் முக்கிய பங்குண்டு என்று குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் முப்படைகளின் வீரமிக்க வீரர்கள், தாய்நாட்டைக் காக்க எப்போதும் விழிப்புடன் செயல்படுகின்றனர். மேலும், நமது அர்ப்பணிப்புள்ள காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய தயாராக உள்ளதாகப் பாராட்டினார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
"நமது அர்ப்பணிப்புள்ள தூய்மைப் பணியாளர்கள் நாட்டை தூய்மையாக வைத்திருக்க முக்கியப் பங்களிக்கின்றனர். நமது அறிவார்ந்த ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையை வடிவமைக்கிறார்கள். நமது உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர். திறமையான கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் எழுத்தாளர்கள் நமது செழுமையான பாரம்பரியங்களுக்கு நவீன வடிவம் கொடுக்கிறார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகிறார்கள்.
உழைப்பாளி மக்கள்
நமது கடின உழைப்பாளியான சகோதர சகோதரிகள் நாட்டைக் கட்டியெழுப்புகிறார்கள். அதேபோல, நம்பிக்கைக்குரிய இளைஞர்களும் குழந்தைகளும், தங்கள் திறமைகளாலும் பங்களிப்புகளாலும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications