பெரிய சதி.. அதானியின் ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீன நிறுவனம்! பின்னணியில் இவ்வளவு நடந்து இருக்கா?
டெல்லி: கென்யாவின் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை (JKIA) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை 2.9 பில்லியன் டாலர் மதிப்பிற்கு சீனா கைப்பற்றி உள்ளது. முன்னதாக இந்த ஒப்பந்தத்ததை அதானி குழுமம் 2 பில்லியன் டாலர் மதிப்பில் கைப்பற்றி இருந்த நிலையில் அதனை அந்த நாட்டின் அரசு ரத்து செய்திருந்தது. அதானி குழுமத்துடனான ஒப்பந்த ரத்தை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு சீன நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது.

நம் நாட்டில் உள்ள முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. இந்நிலையில் தான், விமான நிலையம் பராமரிப்பு, மேம்படுத்துதல், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை உலகளவில் அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாதா சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது. இதன் மதிப்பு ரூ.2 பில்லியன் டாலராகும்.
சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் கைமாறி உள்ளது. சீன நிறுவனம் ஒன்று இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது. கென்யாவை சேர்ந்தவர்கள் மற்றும் நம் நாட்டின் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் இந்த ஒப்பந்தம் கைமாறி உள்ளது. இந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனத்தின் பெயர் சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்சன் கோ (China Communications Construction Co.). இந்த நிறுவனம் தான் 2.9 பில்லியன் டாலர் மதிப்பில் கென்யா விமான நிலைய பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இது, அமெரிக்க துறையின் விசாரணை மற்றும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நவம்பர் 2024ல் ரத்து செய்யப்பட்ட அதானி குழுமத்தின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை விட சுமார் 50 சதவீதம் கூடுதல் மதிப்பை கொண்டது. இந்த ஒப்பந்தம் விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை உள்ளடக்கியுள்ளது
அதானி ஒப்பந்தம் ரத்து ஏன்?
கென்ய அரசு, ஆரம்பத்தில் சில மாதங்கள் அதானி குழுமத்துடன் இப்பணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நீதித்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து (அதனை அதானி குழுமம் மறுத்திருந்தது) கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ மீது எழுந்த கடுமையான அழுத்தத்தினால் நவம்பர் 2024ல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரம் கென்யாவில் அரசியல் ரீதியாகவும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பிரான்சில் வசிக்கும் கென்யாவை சேர்ந்த நெல்சன் அமேன்யா போன்ற சமூக ஊடகப் பிரமுகர்களின் தலைமையிலான பிரசாரங்கள்ல இந்த ஒப்பந்தத்தை சுற்றிய சந்தேகங்களை அதிகரித்தன.
சர்வதேச மற்றும் அரசியல் பின்னணி
இதே காலக்கட்டத்தில், அதானி குழுமத்துக்கு எதிராக தவறான தகவல் பரவல் குறித்த கவலைகளும் எழுந்தன. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை பயன்படுத்தி, சீன ஆதரவு கருத்துகளை பரப்ப 13 போலி சீன செய்தி இணையதளங்கள் பயன்படுத்தப்படுவதை சமீபத்தில் பிரான்ஸ் கண்டறிந்தது. அதேபோல் கென்யாவில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட போலி செய்தி அறிக்கையை அதானி குழுமம் மறுத்திருந்தது.
காங்கிரஸ் போர்க்கொடி
இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், கென்யாவில் அதானி குழுமத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். கென்யாவில் நிலவும் எதிர்ப்பு, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களாக மாறக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அமெரிக்க நீதித்துறை வழக்கை முடித்து வைத்தது. ஆனால் அதற்குள் அதானி ஒப்பந்தம் ரத்தாகி கென்யா தனது விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை கூடுதல் மதிப்பிற்கு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications