எல்லையில் உற்று கண்காணிக்கும் 'டிராகன்' சீனா.. பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பூட்டான் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மோசமான வானிலை காரணமாக நேற்று பூட்டான் பயணத்தை பிரதமர் மோடி ஒத்திவைத்திருந்தார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டான் மிக முக்கியமான எல்லை நாடு. சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாடு பூட்டான். இந்த நாட்டின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை சீனா ஒருபோதும் விரும்பியது இல்லை.

இந்தியா- சீனா- பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பீடபூமியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பது சீனாவின் நோக்கம். ஆனா; பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதி இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இந்திய ராணுவத்தினருடன் சீனா மோதலில் ஈடுபட்டு இருநாடுகளிடையே போர் பதற்றமும் உருவாகியது.
டோக்லாம் பீடபூமி என்பது இந்தியாவின் இதர நிலப்பகுதிகளை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடிய முக்கியமான பகுதி. இதனால் இதற்கு கோழி கழுத்துப் பகுதி- சிக்கன் நெக் என்ற பெயரும் உண்டு. இதனால்தான் டோக்லாம் பீடபூமி மீது சீனா அதீத கவனம் செலுத்தி வருகிறது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்நிலை பரிமாற்றங்களின் பாரம்பரியம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அரசின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி நேற்று பூட்டான் பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பூட்டான் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பயணத்தை சீனா மிக உன்னிப்பாக கவனிக்கவும் தொடங்கியுள்ளது.
பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இந்தியாவும், பூடானும் தனித்துவமான மற்றும் நீடித்த கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது ஆன்மீக பகிரும் பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இடையேயான அன்பான உறவுகள் நமது தனித்துவமான உறவுகளுக்கு வலுவையும் உற்சாகத்தையும் சேர்க்கின்றன. இந்தப் பயணம் இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், நமது மக்களின் நலனுக்காக நமது முன்மாதிரியான கூட்டாண்மையை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு இருநாடுகளிடையே இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications