மகாவிஷ்ணு பிரச்னையே இன்னும் ஓயவில்லை.. அதுக்குள்ள சலசலப்பை கிளப்பிய பிரதமர்! வேத கணிதம் வேண்டுமாம்
டெல்லி: மூட நம்பிக்கை பேச்சு குறித்து மகாவிஷ்ணு மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த சலசலப்பு இன்னும் ஓயாத நிலையில், மாணவர்களுக்கு வேத கணிதம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் சிறப்புரையாற்றியிருந்தார். ஆனால், அவர் பேசிய விஷயங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மனிதர்களின் பிறப்பை முன்ஜென்ம பாவத்தின் அடையாளமாகவும், மாணவிகளிடையே மதரீதியாகவும் சொற்பொழிவு என்கிற பெயரில் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன் என அவர் பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு என்கிற அந்த நபர், அந்த ஆசிரியரை இழிவுப்படுத்தும் வகையில் அறிவற்றவர் எனவும் பேசியுள்ளார். தொடர்ந்து அவர் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தின் சலசலப்புகள் ஓய்வதற்குள்.. பிரதமர் மோடி பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
டெல்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "கணிதப் பாடத்தில் சிரமப்படும் குழந்தைகளுக்கு 'வேத கணித நுட்பங்கள்' மூலம் எளிதில் கணிதத்தைக் கற்றுக் கொடுக்கலாம். கணிதம் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்த புதுமையான கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்து பகுத்தறிவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கணித துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை கடந்த காலங்களில் படைத்திருக்கிறது. ஆனால், அதைவிட பெரிய சாதனைகளை இந்தியா தற்போது செய்திருக்கிறது. இதற்கு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 உள்ளிட்டவற்றை மேற்கோளாக காட்ட முடியும். இப்படி இருக்கையில், மீண்டும் வேத கணிதத்தை நோக்கி நகர்வது பிற்போக்கானது என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications