மோடியின் சிறுவயது முஸ்லிம் நண்பர்.. யார் இந்த அப்பாஸ்? வளர்ந்ததே பிரதமர் வீட்டில்தானாம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது வீட்டில் வளர்ந்த சிறுவயது நண்பர் அப்பாஸ் குறித்து தெரிவித்துள்ள நிலையில் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவலை குஜராத்தை சேர்ந்த பத்திரிகையாளர் வெளியிட்டு உள்ளார்.
பிரதமரின் தாய் ஹீராபாய் மோடி தனது 100 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
இதனை கொண்டாடுவதற்காக, குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தனது தாயின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

தந்தையின் நண்பர் மகன்
அங்கு தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, அவருக்கு இனிப்பு ஊட்டி பாத பூஜை செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதனை தொடர்ந்து தனது சிறுவயது நினைவுகள் குறித்தும் தனது தாய் ஹீராபாய் பற்றியும் நெகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், "எனது தந்தையுடைய முஸ்லிம் நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார்.

மோடி வீட்டில் வளர்ந்த அப்பாஸ்
அவரது மகன் பெயர் அப்பாஸ். அப்பாஸை எனது தந்தை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்பாஸ் எங்கள் வீட்டில்தான் தங்கி படித்தார். என் அம்மா என்னிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் அன்பு காட்டுவதை போன்றே அப்பாஸிடமும் அன்போடு இருந்து அவரை வளர்த்தார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையின்போது அப்பாஸுக்கு பிடித்தமான பலகாரங்களை என் தாயார் செய்து கொடுப்பார்." என்று தெரிவித்து இருந்தார்.

புதிய தகவல்
பிரதமர் மோடியின் இளம் வயது குறித்து இதுவரை வெளிவராத தகவலாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து யார் இந்த அப்பாஸ் என்ற கேள்வி பரவலாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் எழுப்பப்பட்டு வருகிறது. பலரும் இணையதளங்களில் பிரதமர் மோடியின் இளம் வயது நண்பர் அப்பாஸ் குறித்து சல்லடைபோடத் தொடங்கினர். ஆனால் யாருக்கும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அப்பாஸ்
இந்த நிலையில்தான் குஜராத்தை சேர்ந்த பத்திரிகையாளர் தீபல் திரிவேதி அப்பாஸ் குறித்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி அப்பாஸ் குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் பணிபுரிந்திருக்கிறார். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு குடிபெயர்ந்து சென்று இருக்கிறார் அப்பாஸ்.












Click it and Unblock the Notifications