தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் முதல்வர் நாராயணசாமி
டெல்லி: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும், எனவே புதுவையில் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "புதுவை மக்களவை தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவதற்கு, நானும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு துறை அதிகாரிகளை அழைத்து பேசுவதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இடையூராக உள்ளது. குறிப்பாக குறிப்பாக குடிநீர் பிரச்னை, சாலைகள் பிரச்னை, மருத்துவ பிரச்னை, மின்சார பிரச்னை, பள்ளி கல்வி பிரச்னை போன்றவற்றுக்காக தலைமை செயலாளர்கள் மற்றும் செயலாளர்களையும். அதிகாரிகளையும் அழைத்து பேசி ஆலோசனை நடத்த முடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட தேவைகளை செயல்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாங்கள் இப்போது புதிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்க தயாராக இல்லை. தேர்தல் விதிமுறைகள் முடிந்த பின்பு அறிவிப்போம். ஆனால் இதற்கிடையில் மக்கள் நலத்திட்டங்கள் தடைபடக்கூடாது. மதிய உணவு திட்டத்தில் இருந்து இலவச அரிசி திட்டம், முதியோர் உதவி தொகை திட்டம் உள்பட மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என மனு அளித்துள்ளோம். நாளை தினம் நல்ல முடிவு எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications