ஹெச்ஏஎல் தயாரித்த விமான உபகரணங்கள் ரன்வேயிலேயே தெறித்து ஓடும்.. சொல்வது மத்திய அமைச்சர்
Recommended Video
டெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான சர்ச்சை உச்சத்தை எட்டிய நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (ஹெச்ஏஎல்) உற்பத்தி திறன் மீது சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளார்.
திட்டங்களை சரியான நேரத்திற்குள் ஹெச்ஏஎல் முடித்து கொடுப்பதில்லை என்றும், சில திட்டங்கள் மூன்று ஆண்டு காலம் வரை காலதாமதம் செய்யப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஒருவரே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தை குறைத்து மதிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றரை ஆண்டு காலம்
வி.கே.சிங் கூறியதை பாருங்கள்: ஹெச்ஏஎல் நிலைமையை சற்று பாருங்கள். நமது இரு பைலட்டுகள் பலியாகியுள்ளனர். இதை சொல்வதற்கு வருத்தப்படுகிறேன், இருந்தாலும் மூன்றரை ஆண்டு காலம் எல்லாம் திட்டங்கள் காலதாமதம் செய்யப்பட்ட வரலாறு உள்ளது. ரன் வேயில் செல்லும்போதே விமான உபகரணங்கள் தனியாக பிரிந்து சென்ற வரலாறும் உள்ளது.
ஹெச்ஏஎல் வேண்டாம்
ஆனால் ஒரு பக்கம் ரபேல் ஒப்பந்தம் ஹெச்ஏஎல்லுக்கு வழங்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு வி கே சிங் தெரிவித்தார். பெங்களூர் ஹெச்ஏஎல்லில், சமீபத்தில் மிராஜ் வகை விமானத்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டு 2 பைலட்டுகள் பலியாகிய சம்பவத்தை இவ்வாறு நினைவுகூர்ந்துள்ளார் அவர்.
லஞ்சம் வாங்குவது வாடிக்கை
முன்னதாக, கடந்த வாரம் புதன்கிழமை வி.கே.சிங் அளித்த பேட்டி ஒன்றில், ராகுல் காந்தி மற்றும் அவரது பரிவாரங்கள் பாதுகாப்பு துறை கொள்முதலில் லஞ்சம் வாங்குவதை ஆண்டாண்டு காலமாக வழக்கமாக வைத்திருந்தனர். ரபேல் ஒப்பந்தம் அப்படி எதுவும் இல்லாமல் முடிக்கப்பட்டது. இதை ராகுல் காந்தியால் நம்ப முடியவில்லை. எனவே தான் இதற்கு களங்கம் விளைவிக்க முற்படுகிறார்.
நல்ல கொள்முதல்
போபர்ஸ் அல்லது ஹெலிகாப்டர் கொள்முதல் என எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் பழக்கம் என்பது லஞ்சம் வாங்குவது. எனவே நூறு முறை குற்றம் சாட்டினாலும் ஒரு நல்ல கொள்முதலை, ஊழல் கொள்முதலாக மாற்றிவிட முடியாது. இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்திருந்தார்.