இந்திய அரசியல் நடவடிக்கைகளில் ட்விட்டர் தலையிடுகிறது.. ராகுல் காந்தி காட்டமான குற்றச்சாட்டு
டெல்லி: ட்விட்டர் செயலி, இந்திய அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
"ட்விட்டர் உண்மையில் ஒரு நடுநிலை தளம் அல்ல என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. இது ஒருசார்புத் தளமாகும். இது அரசாங்கம் சொல்வதைக் கேட்கும் ஒன்று. எனது ட்விட்டர் அக்கவுண்ட்டை லாக் செய்ததன் மூலம் அவர்கள் எங்கள் அரசியல் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். ஒரு நிறுவனம் நமது அரசியலை வரையறுக்கிறது. ஒரு அரசியல்வாதியாக நான் அதை விரும்பவில்லை.

இது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான தாக்குதல். இது ராகுல் காந்தி மீதான தாக்குதல் அல்ல. இது ராகுல் காந்தியை முடக்குவது மட்டும் கிடையாது. எனக்கு 19-20 மில்லியன் பாலோவர்கள் டுவிட்டரில் உள்ளனர். நீங்கள் அவர்களுக்கு கருத்து உரிமையை மறுக்கிறீர்கள்.
நாம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும். நமக்கான அரசியலை அரசு சொல் கேட்டும் ஒரு நிறுவனம் வரையறுக்க நாம் அனுமதிக்கப் போகிறோமா? என்ற கேள்வி மக்களால் எழுப்பப்பட வேண்டும்.
இது முற்றிலும் நியாயமற்றது மட்டுமல்ல, ட்விட்டர் ஒரு நடுநிலை தளம் என்ற எண்ண முறியடிப்பதாகும்.
முதலீட்டாளர்களுக்கும் இது மிகவும் ஆபத்தான விஷயம், ஏனெனில் அரசியல் போட்டியில் ஏதாவது ஒரு தரப்புக்கு ஆதரவாக நடந்து கொள்வது, ட்விட்டருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் ட்விட்டரில் நாம் நினைத்ததை சொல்லும் வசதி இருப்பதாக நினைத்தேன். ஆனால் அதுவும் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி குடும்பத்தின் புகைப்படங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்த நிலையில்தான், ட்விட்டர் ராகுல் காந்தியின் கணக்கை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தங்கள் விதிகள் மற்றும் சட்டவரைமுறைக்கு எதிரானது என ட்விட்டர் கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பான புகைப்படம் பகிர்ந்த விவகாரத்திற்காக, முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளருமான அஜய் மகான், கட்சியின் லோக்சபா கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications