வாக்கு திருட்டு.. பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் முறைகேடு? ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. வாக்குகள் திருடப்பட்டு, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பாஜக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார் என்று பரபரப்பான தகவலை கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல், பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதி லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தனது குற்றச்சாட்டு தொடர்பான விவரங்களை அவர் திரையில் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறினார். அப்போது பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதி பற்றி ராகுல் காந்தி பேசியதாவது:
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் 9 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. இது ஒரு பெரிய வித்தியாசம். பாஜக, இந்திய தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் பாஜக வட்பாளர் பிசி மோகன் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை 2.58 சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். இருவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 32,707 ஆக உள்ளது. பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மகாதேவபுரா.
மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படியாக மகாதேவபுராவில் 1,00250 ஓட்டுகள் திருடப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். இங்கு புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி முகவரியில், ஒரே முகவரியில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டின்போது ஒரு நபரின் பெயர் 4 வாக்குச்சாவடிகளில் இடம்பெற்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கர்நாடகா மாநில தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பி அவரது குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை வழங்கும்படி கூறியுள்ளது. மேலும் ஆதாரங்களை தராத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வார்னிங் செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் பாஜக சார்பில் விளக்கம் தரப்படவில்லை.
பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிசி மோகன் கடந்த ஆண்டு 4வது முறையாக வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 6,58,915 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் 6,26,208 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பாஜகவின் பிசி மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் மன்சூர் அலிகான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications