தகுதி நீக்கம்..3 மாத அவகாசம்..அவசர சட்டத்தை முட்டாள்தனம் என்றாரே ராகுல்காந்தி.. அண்ணாமலை தாக்கு
டெல்லி: எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதுகுற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்களை தகுதிநீக்கம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அவசரச்சட்ட மசோதாவை ராகுல் காந்தி கிழித்தார். குற்றம் செய்தவர்களுக்கு அவகாசம் தருவது முட்டாள்தனம் என்றுகூறி பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தினார். இன்றைக்கு ராகுல்காந்திக்கு மட்டும் அவகாசம் எப்படி அளிக்க முடியும் என்று கேட்டுள்ளார் அண்ணாமலை.
மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்துக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கும் வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி அதை திரும்ப பெறச் செய்தார். அன்று அவர் செய்த செயல் இன்று அவருக்கு எதிராக திரும்பியுள்ளது என்று அதனை நினைவுப்படுத்தி பேசியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.
கடந்த 2019ஆம் ஆண்டில் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் இந்திய அளவில் #RahulGandhi நம்பர் 1 இடத்தில் ட்ரெண்டானது. அதேபோல் #ISupportRahulGandhi என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

தகுதி நீக்கம்
குஜராத் மாநிலம் சூரத் நீதின்றம் அளித்த உத்தரவின்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுல் காந்தி அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட தடை
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக் காலம் 2 ஆண்டுகள் கழித்து மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். மேல் முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 2024 மற்றும 2029 தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியாது. 2034 பொதுத் தேர்தலில்தான் அவரால் போட்டியிட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியில் இருந்து ராகுல்காந்தி விலகியுள்ளார்.

அவசர சட்டம்
மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்துக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கும் வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி அதை திரும்ப பெறச் செய்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அந்த அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ராகுல் அவசரச் சட்ட நகலை கிழித்து எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ராகுல்காந்திதான் காரணம்
அவர் அன்று எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் இன்று பதவி பறிப்பில் இருந்து தப்பித்து இருப்பார். அந்த அவசர சட்டத்தை நீர்த்துப் போக செய்ததால், அதே சட்டம் இன்று எந்த அவகாசமும், இல்லாமல் உடனடியாக அவரை தகுதி நீக்கத்துக்கு உள்ளாக்கி உள்ளது. அவகாசம் கூட கொடுக்காமல் தகுதி நீக்கம் செய்து விட்டார்கள் என்று இன்றைய தினம் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு காரணமே கடந்த 2013ஆம் ஆண்டு ராகுல்காந்தி செய்த செயல்தான் என்று பலருக்கும் தெரியும். அதைத்தான் நினைவுபடுத்துகிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில்
சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்துக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4)-வது பிரிவை உச்சநீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு தெரிவித்த ராகுல்காந்தி
இந்த அவசரச் சட்டத்துக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது அவசரச் சட்டத்தின் நகல்களை அவர் கிழித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் தீவிர எதிர்ப்பால், அவசரச் சட்டத்தை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றது. தற்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதியின் கீழ் ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்த அவசரச் சட்டம், சட்டமாக நிறைவேறி அவருக்கு தற்போது கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் கிடைத்திருக்கும். மேலும் சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கும் தடை பெற்றிருக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

யோசிக்காமல் செய்த செயல்
ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாதவர். அவசரச் சட்டத்தை அவர் கிழித்தபோதே காங்கிரஸ் கட்சியின் சரிவு தொடங்கிவிட்டது என்று மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த ஆண்டு தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அன்று அவர் தீர்க்க தரிசனமாகத்தான் கூறியுள்ளார். தற்போது ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவ்வளவு அவசரம் ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சித்தலைவர்களும்.

அண்ணாமலை விளக்கம்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதுகுற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்களை தகுதிநீக்கம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அவசரச்சட்ட மசோதாவை ராகுல்காந்தி கிழித்தார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சித்து, முட்டாள்தனம் என்றுகூறி பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தினார். இன்றைக்கு ராகுல்காந்திக்கு மட்டும் அவகாசம் எப்படி அளிக்க முடியும் என்று கேட்டுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications