"ஒரு குட்டி வீட்டில் 80 வாக்காளர்களாம்.. அது எப்படி சாத்தியம்!" ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் தாராக வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியாகப் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தேர்தல்களில் மிகப் பெரியளவில் மோசடி நடப்பதாகவும் விமர்சித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர தேர்தலுக்குப் பிறகு இந்த விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்தன.

ராகுல் காந்தி
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "போலி முகவரிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று இல்லாத முகவரியில் இருப்போர்.. நீங்கள் அங்குத் தேடிச் சென்றால் அதுபோல எந்தவொரு முகவரியும் இருக்காது இருக்காது. மற்றொன்று, வீடு எண் 0, தெரு எண் 0 போன்ற செல்லாத முகவரிகள். இறுதியாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகள் இருக்கும். இத்தகைய போலி முகவரிகள் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000க்கும் மேல் இருக்கிறது.
ஒரே சின்ன வீடு
அடுத்து ஒரு வீட்டில்.. ஒரே படுக்கையைக் கொண்ட வீட்டில் 80 பேர் இருக்கிறார்கள். நேரில் சென்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. அதேபோல இங்கு பூத் எண் 366ல் உள்ள 46 வாக்காளர்கள் அனைவரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவருமே ஒரே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வசிப்பதாக இதில் இருக்கிறது.
நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் யாருமே அங்கு இல்லை. அங்கு விசாரிக்கச் சென்ற போது எங்களை மிரட்டினர். வீடியோ எடுக்கக்கூடாது என்றும் மிரட்டினர். அதேபோல ஒரு மதுபான ஆலைக்கான முகவரியில் 68 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்குச் சென்று இவர்கள் எங்கே எனக் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை.
இரு வேறு பூத்தில் வாக்களித்துள்ளார்
அதேபோல 70 வயதான வாக்காளர் ஒருவர் இரு முறை வெவ்வேறு பூத்களில் வாக்காளராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இரு முறை வாக்களித்தும் இருக்கிறார். அவர் தான் வாக்களித்தாரா.. இல்லை வேறு யாராவது போலியாக வாக்களித்தாரே என்பது தெரியவில்லை. இவர் ஒருவர் மட்டுமில்லை. இதுபோல பலர் போலியாக மோசடியாக வாக்களித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது; அதைப் பாதுகாக்கும் பணியில்தான் இருக்க வேண்டும்.. இப்போது எங்களிடம் உள்ள அனைத்துத் தகவல்களும் ஆதாரங்கள். இது இந்திய அரசியலமைப்புக்கும், இந்தியத் தேசியக் கொடிக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றம்.
மோசடி நடந்துள்ளது
இது ஒரு தொகுதியில் மட்டும் நடந்த மோசடிக்கான ஆதாரம். அதேநேரம் இந்தக் குற்றம் நாடு முழுவதும், பல மாநிலங்களில் பெரிய அளவில் நடைபெறுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏனெனில் இதில் ஒரு பேட்டர்னை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவை இந்தக் குற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த ஆதாரங்களை அழிக்க முயல்கிறது. இந்த நாட்டில் ஒரு பெரிய கிரிமினல் மோசடி நடைபெறுகிறது என்பதைத் தேசம் அறிய வேண்டும். இந்த மோசடி தேர்தல் ஆணையத்தாலும், ஆளும் கட்சியாலும் செய்யப்படுகிறது. நாங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத தெளிவான ஆதாரங்களை அளித்துள்ளோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications