‛நூரி’.. முஸ்லிம் பெண்களை அவமதித்த ராகுல்? நாய்க்குட்டியின் பெயரால் சர்ச்சையை கிளப்பும் ஓவைசி கட்சி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கோவாவில் இருந்து ஆசையாக வாங்கிய நாய்க்குட்டியை தனது தாய் சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் நாய்க்குட்டிக்கு வைக்கப்பட்ட ‛நூரி' எனும் பெயரால் ராகுல் காந்தியை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் செய்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களை அவர் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.
இப்படி பல செயல்களை ராகுல் காந்தி செய்து வந்தாலும் கூட சமீபகாலமாக தாய் சோனியா காந்தியுடன் அதிகமாக நேரமும் செலவிட்டு வருகிறார். சோனியா காந்தி குறித்த போட்டோக்களை தனது வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி சமீபத்தில் கோவாவில் இருந்து வாங்கிய ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார்.
இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். பிறந்து 3 மாதங்களே ஆன இந்த நாய்க்குட்டியை சோனியா காந்திக்கு வழங்கியது, சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. அப்போது ராகுல் காந்தி அந்த நாய்க்கு ‛நூரி' என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த வீடியோவை பலரும் ரசித்த நிலையில் தான் தற்போது ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ள ‛நூரி' எனும் பெயர் தான். இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக முகமது பர்ஹான், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதுதொடர்பாக முகமது பர்ஹான் கூறியதாவது:
‛‛ராகுல் காந்தி தனது செல்ல நாய்க்குட்டிக்கு ‛நூரி' என பெயரிட்டுள்ளார். இதனை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மேலும் ராகுல் காந்தியின் செயல்பாடு என்பது வெட்கக்கேடானது. முஸ்லிம் மகள்கள் ஏராளமானவர்கள் நூரி எனும் பெயரை கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முஸ்லிம் மகள்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மரியாதையை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது'' என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications