நாடாளுமன்ற லோக்சபா காங். தலைவராகிறார் ராகுல்காந்தி?.. காரணம் தீதியா?
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கலாம் என சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்ட சீனியர்கள் வலியுறுத்துவதாக தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களிடம் தகவல் பரவியுள்ளது.
லோக்சபாவின் காங்கிரஸ் தலைவராக தற்போது இருப்பவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ! நேரு குடும்பத்து விசுவாசி. சமீபகாலமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறாராம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரசை சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் விமர்சித்ததில்லை. ஆனால், மம்தாவை கடுமையாக தாக்கி பேசினார் ஆதிர் ரஞ்சன். அப்போதே, ரஞ்சனிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் ராகுல்.

ரஞ்சன் அலட்சியம்
ஆனால், அதனை ரஞ்சன் அலட்சியப்படுத்தியிருக்கிறார். பாஜகவின் வலையில் அவர் வீழ்ந்து விட்டார். அதுதான், கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக மம்தாவை அவர் எதிர்க்கிறார் என அப்போதே எம்.பி.க்கள் பலரும் சந்தேகத்தை கிளப்பினர்.

சோனியா காந்தி
இது சோனியாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. ரஞ்சன் மீதுள்ள பாஜக சந்தேகம் இப்போதும் எம்.பி.க்களிடம் இருப்பதாலும், அவரை வைத்துக் கொண்டு இந்த கூட்டத்தொடரில் எப்படி இயங்குவது என யோசிக்கிறார்கள்.

திமுக- திரிணமூல் காங்கிரஸ்
திமுக-திரிணமூல் காங்கிரஸ் துணையுடன்தான் பாஜகவை நாம் எதிர்க்க வேண்டிய சூழலில், மம்தாவுக்கு எதிராக இவர் செயல்பட்டால் எப்படி பாஜகவை எதிர்கொள்வது என சோனியாவிடம் சொல்லி வருகிறார்கள் எம்.பி.க்கள்! இது குறித்து சீனியர்களிடம் சோனியா பேசியபோதுதான், ராகுலை லோக்சபாவின் தலைவராக்கலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டதாம்.

லோக்சபா தலைவர் மாற்றம்
அதனால் லோக்சபா தலைவர் மாற்றம் குறித்து தலைமையில் சீரியசாக விவாதிக்கப்படுகிறது. எனினும் ராகுலை தலைவராக்கலாம் என்ற யோசனையை அவர் இதுவரை ஏற்கவில்லை என்றே தமிழக எம்.பி.க்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியவர் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications