மோடி என்ன பேசினாலும்.. நான் அன்பை பொழிவேன்.. அந்த அன்பு அவரை தோற்கடிக்கும்.. ராகுல் கூல் பதில்!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரதமர் மோடி வைத்து இருக்கும் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரதமர் மோடி வைத்து இருக்கும் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிரச்சாரம் நாளுக்கு நாள் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
கடந்த வாரம் ராஜீவ் காந்தியை மோடி கடுமையான முறையில் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
என்ன சொன்னார்
கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார்.
|
ராகுல் பதில்
இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மோடி ஜி, இந்த போர் முடிந்துவிட்டது. உங்களுக்காக கர்மா காத்துக் கொண்டு இருக்கிறது. உங்களை பற்றிய உங்களது சொந்த கருத்துக்களை என் அப்பா மீது திணிக்கிறீர்கள், அது உங்களை எப்போதும் காக்க போவதில்லை. உங்களுக்கு என் அன்புகள்.. என்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.
மீண்டும் விமர்சனம்
நேற்று மீண்டும் ராஜீவ் குறித்து பேசிய மோடி, நான் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? முடிந்தால் நீங்கள் ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். டெல்லியில் அவர் பெயரை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா?என்றார்.
ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேட்க தைரியம் இருக்கிறதா? மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!
என்ன பதில்
இந்த நிலையில் மீண்டும் ராஜீவ் மீதான மோடியின் புதிய விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதில் அளித்து இருக்கிறார், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேட்டி அளித்த ராகுல் காந்தி, மோடியின் விமர்சனத்தை மிகவும் கூலாக எதிர்கொண்டு உள்ளார்.அவர் தனது பேட்டியில், என் அப்பாவை குறித்து கடந்த சில நாட்களாக மோடி பேசி வருகிறார்.
முடியாது
அவர் என்னை குறித்தோ, என் அப்பாவை குறித்தோ, அம்மாவை குறித்தோ, பாட்டியை குறித்தோ என்ன பேச முடியுமோ பேசட்டும். நான் கோபம் அடைய மாட்டேன். உங்களின் வெறுப்பான பேச்சுகளுக்கு கூட நான் அன்பைதான் பதிலாக தருவேன்.
அன்புதான்
உங்கள் கோபத்திற்கு என் அன்பு பதில் சொல்லும். நான் உங்களை முழு அன்புடன்தான் பாராளுமன்றத்தில் கட்டிப்பிடித்தேன். அந்த அன்பு இருக்கிறதே.. அதுதான் உங்களை வரும் மே 23ம் தேதி தோல்வி அடைய செய்ய போகிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.