"5 லட்சம் பேர் இல்லை, 40 லட்சம் பேர் பலி! ஒரே காரணம் அரசின் அலட்சியம்!" விளாசி தள்ளும் ராகுல் காந்தி
டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாகக் குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவ தொடங்கியது. அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது தான் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்தியா
இந்தியாவைப் பொருத்தவரை முதலில் கடந்த 2020 தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. நாட்டில் முதல் அலை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் டெல்டா கொரோனா காரணமாக ஏற்பட்ட 2ஆம் ஆலை நாட்டில் மிக மோசமான கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் ஆக்சின் இல்லாமல் கூட மக்கள் அவதிப்படும் சூழல் நிலவியது. இதனிடையே தான் கடந்த ஜனவரி மாதம் நாட்டில் 3ஆம் அலை ஏற்பட்டது.

3ஆம் கொரோனா அலை
3ஆம் அலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பு அல்லது உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்தவில்லை. வரும் காலங்களில் தோன்றும் புதிய உருமாறிய கொரோனா வகைகளும் இதேபோல லேசான பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது என்றும் மக்கள் அனைவரும் விரைவாக வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உண்மை பேசவில்லை
அதேபோல இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, "மோடி ஜி உண்மையைப் பேசவில்லை. மற்றவர்களைப் பேச விடவும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் இன்னும் பொய் சொல்கிறார்!" ட்வீட் செய்துள்ளார்.

40 லட்சம் இந்தியர்கள்
மேலும், அவர் தனது ட்விட்டரில், "நான் முன்பே கூறியிருந்தேன் - கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால், ஐந்து லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள், மோடி ஜி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹ 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சியை இந்தியா தடுப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார துறை
இதற்கிடையே நாட்டில் கொரோனா உயிரிழப்புகளை மதிப்பிடும் உலக சுகாதார அமைப்பின் வழிமுறை குறித்து கேள்வி எழுப்பியது. உலகின் மிகப் பெரிய மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இவ்வளவு பெரிய நாட்டில் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை மதிப்பிட இதுபோன்ற மாடல்களை பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை தகவலின்படி நாட்டில் 5.21 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications