சீனாவின் அட்டூழியத்தை ஒடுக்க யுத்தி இல்லாத மத்திய அரசு.. அஞ்சுகிறார் நரேந்திர மோடி.. ராகுல் தாக்கு
டெல்லி: சீனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்த வித யுத்தியும் இல்லாததால் தேசத்தின் பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சீன எல்லை பிரச்சினையில் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்திய பாதுகாப்பு படை தலைமையும் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுப்பதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எல்லையில் சுமுகமான போக்கு இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர், அருணாச்சல பிரதேச எல்லையில் இரு தரப்பு ராணுவமும் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.

சீனா
இந்த நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா மிகப் பெரிய கிராமத்தை கட்டியுள்ளதை அமெரிக்க நாடுகளின் ராணுவ தலைமையகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா இடையே படைகளை குவித்திருப்பதை திரும்ப பெற இரு தரப்பினரும் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக முடிவுகள் எட்டப்படவில்லை.

சீனா
இந்த நிலையில் எல்லை பகுதிகளில் தனது உரிமையை நிலைநாட்ட சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சர்ச்சைக்குரிய இடமான சாரே ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு முதல் சீனா ஒரு கிராமத்தை அமைத்துள்ளது. இது இந்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் எல்லையில் வாழும் மக்களுக்காக கட்டமைப்பை உருவாக்கியதாக சீனா கூறினாலும் அதன் போக்கு எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாது என்பதே பலரது கருத்தாக உள்ளது. கடந்த ஆண்டு முதல் ஒரு கிராமத்தை அமைத்து 100 க்கும் மேற்பட்ட வீடுகளை அமைத்த நிலையில் இதை இந்திய அரசு கண்டுபிடிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

பாதுகாப்பு படை
இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்திய பாதுகாப்பு படை தலைமை தளபதியும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த வியாழக்கிழமை கூறுகையில் இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமித்து புதிய கிராமத்தை கட்டியதாக கூறப்படுவதில் உண்மையில்லை. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் சீன எல்லையில்தான் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

என்ன முரண்பாடு
ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சகமோ, கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சீனா கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நமது தேசத்தின் பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது.

சீனா அத்துமீறல்
இது ஏனென்றால் இந்திய அரசு சீனாவின் அத்துமீறலை ஒடுக்க எந்த வித யுத்தியையும் வகுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சீனாவை பார்த்து பயப்படுகிறார். ஆனால் எனது கவலையெல்லாம் நமது இந்திய வீரர்களை பற்றிதான். இப்படி பொய்களை சொல்லும் இந்திய அரசை நம்பி தங்கள் உயிரை பயணம் வைத்து எல்லையை காத்து வருகிறார்களே என்ற கவலைதான் எனக்கு ஏற்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications