நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. உண்மையில் என்ன நடந்தது! சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை
டெல்லி: தேசத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் சிக்கியது. இதில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
விபத்து: இந்த விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் விபத்திற்கான காரணம் தெரியவில்லை. ரயில்வே அமைச்சகம் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கவில்லை. கோரமண்டல் ரயிலுக்கு முதலில் சிக்னல் தரப்பட்டு, பின்னர் மீண்டும் ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்குள் அது லூப் டிராக்கில் நுழைந்ததால் அது சரக்கு ரயிலில் மோதியதாகவும் கூறப்படுகிறது. கோரமண்டல் ரயலின் சில பெட்டிகள் பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் விழவே, அதன் மீது ஹவுரா ரயில் மோதியுள்ளது.
இருப்பினும் ரயில்வே அமைச்சகம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறதாகவும் அவர் தெரிவித்தார்.
அஸ்வினி வைஷ்ணவ்: செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "விபத்து நடந்த விதம், அங்குள்ள சூழல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ரயில்வே வாரியம் இந்த விபத்து குறித்த முழு வழக்கையும் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்கிறது.
இந்த ரயில் விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இப்போது ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. மேலே உள்ள மின்சாரக் கம்பிகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நோயாளிகள் பலரும் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
முன்பு என்ன சொன்னார்: சில மணி நேரத்திற்கு முன்பு தான் விபத்திற்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், "இந்த கொடூர விபத்தின் மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்.. நான் கூடுதலாக எதையும் செல்ல விரும்பவில்லை. விபத்து குறித்த அறிக்கை வெளிவரட்டும். இந்த விபத்திற்கான மூல காரணமும் அதற்குக் காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.
பாலசோரில் இப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அதையும் ரயில்வே அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அங்கே சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து ரயில் சேவையும் தொடங்கப்படும் என்றே தெரிகிறது.
இந்த ரயில் விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும், பல ரயில்கள் முழுமையாக ரத்தும் செய்யப்பட்டன. மேலும், பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications