பெல்ட் வெடிகுண்டு... பேரறிவாளன் வழக்கில் சிபிஐ அறிக்கை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த பதில் அறிக்கை மீது கடும் அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். இதனிடையே உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததால் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி பெல்ட் வெடிகுண்டு மூலம்தான் படுகொலை செய்யப்பட்டாரா?
இந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து சிபிஐ தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதனை படித்து பார்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே சிபிஐ தாக்கல் செய்த விவரங்கள்தான் இதில் இருக்கின்றனவே தவிர புதிய விவரங்கள் எதுவும் இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மேலும் புதிய விவரங்களுடனான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications