"மொழியை வைத்து நாட்டை பிரிக்கக்கூடாது.. இந்தி பேசுபவர் தமிழுக்கு எதிரி இல்லை!" ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லி: மும்மொழி கொள்கை குறித்து தமிழ்நாட்டில் பெரும் விவாதமே நடந்து வருகிறது. இதற்கிடையே ராணி வேலு நாச்சியாரை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மொழிகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்தினார். மேலும், மொழியின் பெயரால் நமது நாட்டை பிரிக்க எந்த முயற்சியும் இருக்கக்கூடாது என்ற அவர் இந்தி பேசுபவர் தமிழின் எதிரி அல்ல என்றும் தெரிவித்தார்.
இப்போது மும்மொழி கொள்கை குறித்து நாடு முழுக்க விவாதம் நடந்து வருகிறது. இந்தி மொழி திணிக்கப்படுவதாலேயே புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவினர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

ராஜ்நாத் சிங்
இதற்கிடையே பாஜக மகளிர் அணி சார்பில் ராணி வேலு நாச்சியாரை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவில் மொழியியல் ஒற்றுமை, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் வீரத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இந்திய மொழிகளுக்கு இடையே போட்டி இருக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், மொழிகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
நாட்டை பிரிக்கக்கூடாது
ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், "மொழியின் பெயரால் நமது நாட்டை பிரிக்க எந்த முயற்சியும் இருக்கக்கூடாது. இந்தி பேசுபவர் தமிழின் எதிரி அல்ல; மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் ஒருசேர வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை என்பது நமது பலம் தான். இது நமது ஒற்றுமைக்கு ஆதாரமாகவே இருக்கிறது. முரண்பாடு அல்ல.
தமிழ், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து பாதுகாப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். மேலும் ஒரு மொழியை ஊக்குவிப்பது ஒருபோதும் மற்றொரு மொழியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
கவலை அளிக்கிறது
மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் தமிழ் வழிக் கல்வி இருக்க வேண்டும். அதை வழங்குவதை விட இந்திக்கு எதிரான எதிர்ப்பில் தான் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இது நிஜமாகவே கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆனால், பாஜக அனைவரின் நலனுக்காக பாசிட்டிவாகவே செயல்படுகிறது" என்றார்.
தலைமைத்துவம் எது
தொடர்ந்து ராணி வேலுநாச்சியார் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "வேலு நாச்சியாரை தைரியம், தேசபக்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் சின்னமாகவே குறிப்பிடலாம். உண்மையான தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் இருப்பதில் இல்லை. மாறாக அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடுவதில் தான் இருக்கிறது.
ராணி லட்சுமிபாய், ராணி துர்காவதி மற்றும் ராணி சென்னம்மா ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலாகப் போராடியவர்கள். அவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்போது, அதன் மூலம் நாடு முழுக்க நன்மை கிடைக்கிறது. சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு மற்றும் ஒத்துழையாமை இயக்கங்களில் பெண்கள் பங்கேற்றபோது தான், இந்தப் போராட்டங்கள் அரசியலைத் தாண்டி தேசிய இயக்கங்களாக மாறி, நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்தன" என்றார்.












Click it and Unblock the Notifications