பாராளுமன்றத்தில் பாதம் பதித்த பண்ணைப்புரத்து இசைமேதை இளையராஜா-நியமன எம்.பி.யாக பதவியேற்றார்!
டெல்லி: தமிழகத்தின் தென்கோடி எல்லை கிராமங்களில் ஒன்றான பண்ணைப்புரத்தில் பிறந்து இன்று நாடாளுமன்றத்தில் அறிஞர்கள், மாமேதைகள் பிரதிநிதித்துவப்படுத்திய மாநிலங்களவை எனும் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் மண்ணின் மகத்தான மாபெரும் இசைக் கலைஞன் ராசய்யா எனும் நமது தமிழ் மகன் இளையராஜா.
பண்ணைப்புரத்தில் 1943-ம் ஆண்டு பிறந்த இளையராஜாவுக்கு இப்போது வயது 79. இன்றைக்கும் என்றைக்கும் தமது இசையை இளமையானதாகவே வழங்கி வருகிறவர் இசைஞானி. 70களின் இறுதியில் 80,90களில் தமிழ் திரை உலகை கட்டிப் போட்ட உச்சாணிக் கலைஞன் இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தொடக்க காலங்களில் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட சகோதரர்களுடன் இணைந்து கச்சேரிகள், நாடகங்களுக்கு இசை அமைத்தார் இளையராஜா.

தமிழ்த் திரை உலகம்
பின்னர் திரை உலகத்துக்குள் நுழைந்த இளையராஜா, தன்ராஜ் மாஸ்டரிடம் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுத் தேர்ந்தார். 1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழகத்துக்கான இசைமரபுக்கு மணிமகுடம் சூட்டி புதிய சரித்திரத்தைத் தொடங்கி வைத்தார் இளையராஜா. 56 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜாவின் இசையில் உருவான மச்சானைப் பார்த்தீங்களா பாடல் இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு குக்குராமத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. ஆம்.. இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நெஞ்சுக்குள் சுமந்தபடி எத்தனையோ காதல் ஓவியங்கள் சரித்திரங்களாகியும் இருக்கின்றன!

மக்களின் மனதில் ராஜா
1976-ல் அன்னக்கிளியில் தொடங்கிய இசைஞானியின் தமிழ் திரை உலகப் பயணம் அலைகடல்களைத் தாண்டி கொடிகட்டிப் பறக்கிறது. சிம்பொனி இசையால் உலகதை தன்வயப்படுத்தியவர் இசைஞானி. இதுவரை சுமார் 1,000க்கும் அதிகமாக திரைப் படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்திருக்கிறார்; பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றிப் பாடியும் இருக்கிறார் இளையராஜா. இளையராஜாவின் சிம்பொனி திருவாசகம் மெய்மறக்க வைத்த இசைச் சித்து என்பதில் மாற்று கருத்து இருந்ததும் இல்லை. இறைவன் மீதான பித்தால் இளையராஜா உருகியிருக்கிறார் என்பது ஒரு பக்கம்.. இளையராஜாவின் மீதான பித்தால் கலாரசிகர்கள் உருகிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது இன்னொரு பக்கம்.

விருதுகள், சர்ச்சைகள்
உயர் விருதுகள் இசை உலகில் தொட முடியாத சிகரங்களின் சேர்க்கையாக இமயமலையாக திகழும் இசைஞானிக்கு எத்தனை எத்தனையோ விருதுகள்! 2010-ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றனா பத்ம பூஷண், 2018-ல் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இசைஞானி என இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட பெரும் பட்டம் இன்றளவும் நிலைத்த ஒன்றாக நிற்கிறது. இளையராஜாவை சுற்றிய சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஓய்வும் இருப்பதில்லை என்பதும் ஒருபக்கம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தொடர்பான விமர்சனம் புயலைக் கிளப்பியது. அண்மையில் அண்ணல் அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு முன்னுரை ஒன்றில் எழுதியது ஆழிப்பேரலையையே உருவாக்கிவிட்டது.

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு
தமிழகத்தின் பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நேற்றைய ராசய்யா எனும் இன்றைய இளையராஜா, இப்போது பாராளுமன்றத்தில் மேலவை- நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா எம்.பி.யாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் நியமிக்கப்பட்டு இன்று பதவியும் ஏற்றுக் கொண்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருப்பது அப்பட்டமான யதார்த்தம் அல்லாமல் வேறு என்னவாம்?












Click it and Unblock the Notifications