சர்ச்சைக்குரிய அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு கூடுதல் பொறுப்பு.. மோடி தலைமையிலான கமிட்டி முடிவு
டெல்லி: போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான இயக்குநராக சிபிஐ முன்னாள், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுடன், அஸ்தானாவுக்கு ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடியே தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அஸ்தானா, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பணி நியமனங்களுக்கான, கேபினெட் கமிட்டி, அஸ்தானாவுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கு அஸ்தானா இப்பதவியில் தொடருவார். ஜூலை 4ம் தேதி முதல் இந்த பதவி காலியாக இருந்து வந்தது. ஏனெனில் அப்பதவியில் இருந்த அபய், ஹைதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுக்காக சிபிஐ அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்திருந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். இப்படியாக சர்ச்சைகள் மிகுந்த ஒருவருக்கு கூடுதல் பொறுப்பை பிரதமர் தலைமையிலான கமிட்டி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்தானா 1984ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி என்பது நினைவிருக்கலாம்.