5 ஆண்டுகளுக்கு பின் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! கார், வீடு லோன்களின் EMI குறைய வாய்ப்பு
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதமும் குறைந்திருக்கிறது.

ரெப்போ வட்டி என்றால் என்ன?:
நாம் வங்கிகளில் கடன் வாங்குவததை போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம்(RBI) கடன் வாங்கியிருக்கும். இந்த கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். இதைத்தான் ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்று அழைப்பார்கள். இந்த வட்டி அதிகமாக இருந்தால் வங்கிகள் கடன் வாங்குவதை குறைத்துக்கொள்ளும். அதேநேரம் வங்கியிடமிருந்து கார், வீடு லோன்களை வாங்கியிருந்தால் அதற்கான EMI அதிகரிக்கும். இது நம்மை போன்ற சாமானிய மக்களின் தலையில்தான் வந்து விழும்.
ஆனால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்துவிட்டால், வங்கிகள் கடன் வாங்குவது அதிகரிக்கும். எனவே நமக்கும் லோன்களுக்கான EMI குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்படித்தான் ரெப்போ வட்டி பலனளிக்கிறது.
ரிசர்வ் வங்கி செய்தது என்ன?:
கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இன்று ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கார், வீடு லோன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரெப்போ வட்டி குறைப்பால் யாருக்கெல்லாம் பயன்?:
கார், வீடு லோன் வாங்கியிருப்பவர்களுக்கு இது பயன் கொடுக்கும். இந்த லோனுக்கான EMI தொகை குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி குறைவதால் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணவீக்கத்தை தடுக்க இது பயன்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பிப்.1ம் தேதி பட்ஜெட்டை வாசித்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரிக்கான உச்சவரம்பை ரூ.12 லட்சமாக மாற்றி அறிவித்திருந்தார்.
இது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல தற்போது ரெப்போ வட்டி குறைந்திருப்பதும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications