ம்ஹூம்.. ஒரு நாள் 86 லட்சம் வேக்சின் போட்டதோட சரி.. மற்றபடி மந்தம்! 3வது அலையை தவிர்க்கவே முடியாதாம்
டெல்லி: ஒரு நாளில் 86 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போட்டுவிட்டால் மட்டும் இந்தியாவில் 3வது அலை பரவுவதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
Recommended Video
இந்தியாவில் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இது ஒரு சாதனையாக, மத்திய அரசால், கூறப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா, சீனா மற்றும் மேலை நாடுகளில் ஒரு நாளைக்கு 2 கோடி அளவுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதாக குறிப்பிடும் நிபுணர்கள், இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் கடந்த வாரம் சராசரியாக ஒரு நாளைக்கு 46 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து தடுப்பூசி ஏற்றுமதியையும் நிறுத்தி, தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பயனடைந்த போதிலும், இந்தியா 4% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளது.
பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி சான்றிதழை இணைத்துக் கொள்ள கோவின் போர்ட்டலில் வந்தாச்சு வசதி
மோசமான 3வது அலை
இந்த விகிதத்தில் போய்க் கொண்டு இருந்தால், மூன்றாவது அலை சில மாதங்களுக்குள் வரக்கூடும் என்று கூறுகிறார்கள் சில நிபுணர்கள். ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதது போன்ற பாதிப்புகளை 2வது அலை ஏற்படுத்தியது. 3வது அலை வந்தால், நிலைமை அதைவிட மோசமாக இருக்க கூடும் என்பதால், தடுப்பூசியை அதிகம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அடுத்த மாதம் முதல் 220 மில்லியன் ஷாட்கள் இந்தியாவுக்கு கிடைக்கும். ஆனால் அதற்குள்ளாக டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக 3வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
சாதனை மனப்பாங்கிலிருந்து வெளியே வாருங்கள்
சுகாதார பொருளாதார வல்லுனரும், கொச்சியில் உள்ள ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியின் துணை பேராசிரியருமான ரிஜோ எம். ஜான் ட்விட்டரில் கூறுகையில், ஒரு நாளில் அதிக தடுப்பூசியை செலுத்தி விட்டு, நெஞ்சை நிமிர்த்தி சாதனை எனக் காட்டுவதை இத்தோடு மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஏனெனில், நம்மிடம் போதிய அளவுக்கு தடுப்பூசி இல்லை. சாதனை விளம்பரத்திற்காக ஒரே நாளில் மொத்தத்தையும் காலி செய்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த வருஷம்தான் 60 சதவீதமே ஆகும்
தினசரி சராசரியாக சுமார் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால், இந்த ஆண்டு இறுதிக்குள், நமது நாட்டு மக்கள்தொகையில் 45% பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். 2022 மார்ச் மாதத்திற்குள், 60% பேருக்கு தடுப்பூசி போட முடியும்.
3வது அலை பற்றி எச்சரிக்கை
அதிகமான தடுப்பூசிகள் கிடைத்தால் மற்றும் வேகம் 30% அதிகரித்தால், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 55% தடுப்பூசிகளை முழுமையாக செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் 3வது அலை இன்னும் 2 மாதங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளதாம். அப்படியென்றால், இப்போதுள்ள தடுப்பூசி செலுத்தும் அளவு, நோய் பரவலை கட்டுப்படுத்தாதே என்ற அச்சம் மருத்துவத்துறை வல்லுநர்களிடம் உள்ளது.