காரை ஓட்டி வந்த உமர் முகமது.. மிக பெரிய தீவிரவாத நெட்வொர்க் அம்பலம்! டெல்லி கார் வெடிப்பில் பகீர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விசாரணையில் காரை ஒட்டி வந்தது டாக்டர் உமர் முகமது கான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கும் ஃபரிதாபாத் தீவிரவாத குழுவுக்கும் இடையேயான தொடர்பும் அம்பலமாகி வருகிறது.
நேற்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு ஏற்பட்டது. இதில் அருகே இருந்த பல கார்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த கார் வெடிப்பு தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார் வெடிப்பு
அதாவது செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் 1 அருகே திங்கட்கிழமை மாலை வெடித்த ஹூண்டாய் ஐ20 காரில் வெடிபொருட்கள் இருந்துள்ளன. மாலை 6:52 மணியளவில் கார் வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இது அப்பகுதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத குழுக்களின் தற்கொலைப்படைத் தாக்குதலைப் போல இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இச்சம்பவத்திற்கும் புல்வாமாவுக்கும் இடையே உள்ள தொடர்பை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
லிங்க்
இந்தக் காரை புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவர் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது விசாரணைக்காக கஸ்டடியில் இருக்கிறார். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், இந்த வெடிப்பை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஃபரிதாபாத் பயங்கரவாதக் குழுவிற்கும் இடையில் இந்த தாரிக் ஒரு லிங்க் ஆக செயல்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத நிதி திரட்டுவதில் ஈடுபட்டதாகக் கூறி, ஃபரிதாபாத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதக் குழுவைப் பல மாதங்களாக உளவுத்துறை கண்காணித்து வந்துள்ளது. இந்தக் குழுவே டெல்லி தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வெடிபொருட்களை வழங்கியதாக நம்பப்படுகிறது.
உமர் முகமது கான்
ஃபரிதாபாத் குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் உமர் முகமது தான் இந்த கார் வெடிப்பை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது புலனாய்வு அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். டாக்டர் உமர் தனது தீவிரவாத நெட்வொர்க் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தற்கொலைப்படை தாக்குதலாக இதை நடத்தியிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காருக்கு உள்ளே மீட்கப்பட்ட கருகிய உடலின் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு, அது டாக்டர் உமர் தானா என்பது உறுதிப்படுத்தப்படும். டாக்டர் உமர் பல மாதங்களாகத் தலைமறைவாக இருந்துள்ளார். அவரது கூட்டாளி டாக்டர் முசம்மில் ஷகீல் கைதை தொடர்ந்தே உமர் தலைமறைவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷகீலிடமிருந்து தான் கடந்த வாரம் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..
அவசர அவசரமாக கார் வெடிப்பு
ஷகீலின் கைது, பயங்கரவாத குழுவிற்குள் பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. தனது கைதைத் தவிர்ப்பதற்காக டாக்டர் உமர் அவசர அவசரமாக இந்த கார் வெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார் எத்தனை பேருக்குக் கைமாறியது என்பதைக் கேட்டாலே தலைச் சுற்றும். முதலில் முகமது சல்மானுக்கு சொந்தமான இந்த கார், பின்னர் நதீம் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. அது பிறகு ஃபரிதாபாத்தில் உள்ள ராயல் கார் ஜோன் என்ற பழைய கார் டீலருக்கு விற்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து தாரிக் வசமிடம் சென்று, இறுதியாக டாக்டர் உமர் முகமதிடம் வந்துள்ளது.
கைமாறியது ஏன்
காரின் உண்மையான உரிமையாளரை மறைத்து, கார் வெடிப்பு தற்செயலானது என்பதைப் போலக் காட்டவே வேண்டும் என்றே இத்தனை பேருக்கு விற்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள். இருப்பினும், ஷகீல் சிக்கியவுடன், தாரிக் மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாதக் குழுவிற்கும் இடையிலான தொடர்பு அம்பலமாகிவிட்டது.
காட்டுவது ஒரு விஷயத்தை தான்
டெல்லி போலீசாரும், மத்திய விசாரணை ஏஜென்சியும் ஒரு பெரிய பயங்கரவாதக் குழுவை பிடித்து, 2,900 கிலோவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட்டை கைப்பற்றிய சில மணிநேரங்களிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த அளவு வெடிபொருள் நூற்றுக்கணக்கான IED குண்டுகளைத் தயாரிக்கப் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா விஷயங்களும் இந்த ஃபரிதாபாத் தீவிரவாத குழுவை நோக்கியே இருக்கிறது. இதனால் இது ஒரு பெரிய சதியின் முதல் அடுக்காக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications