பிறந்தது வெவ்வேறு நாடுகள்.. தேசிய கீதம் பாடிய அகதிகள் - ‘இந்தியாவின் பெருமை இதுதான்’.. நெகிழ்ச்சி!
டெல்லி : இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 புலம்பெயர்ந்தோர், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள் தங்களது இந்திய நேசத்தை தேசிய கீதம் பாடி வெளிப்படுத்தி உள்ளனர்.
மியான்மரை சேர்ந்த ஆரா ரெம் மாவி, லென் நுயாம், விக்டர், மரியா, முன்பி, சான் சான், இலங்கையை சேர்ந்த திசாந்தனா, கேமரூனை சேர்ந்த ஒடிட்டி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அப்துல்லா, அகுலா, சேயாஸ் ஆகியோர் இந்தியாவில் புலம்பெயர்ந்து தஞ்மடைந்துள்ளனர்.
கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து, இவர்கள் 12 பேரும் தேசிய கீதத்தை மெய்சிலிர்க்க பாடியுள்ளனர். இந்த வீடியோவை மத்திய கலாச்சார அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
நார்வேயின் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியாவுக்கு 75 வயது! இந்திய அன்னையின் எப்போதும் வரவேற்கும் அரவணைப்பில் அடைக்கலம், நம்பிக்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் கண்டுள்ள, கொந்தளிப்பான அண்டை நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் இதயங்களில் இந்தியா வாழ்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை சமூகவலைதளவாசிகள் பலரும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டர்வாசி ஒருவர், "என்ன ஒரு அழகான காட்சி! நான் எப்போதும் பார்க்க விரும்பும் என் இந்தியா இது!! இது ஒரு சிறந்த மற்றும் அன்பான தேசத்தின் கதை. அவர்கள் இந்தியாவைத் தங்கள் வீடாகத் தேர்ந்தெடுத்ததற்காக நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். ஜெய் ஹிந்த்!!!" எனத் தெரிவித்துள்ளார்.