ஷாக்.. இனி ஐபிஎல் போட்டிகளை ஜியோவில் பார்க்க முடியாது.. என்ன காரணம்! அப்போ இலவசமாக பார்க்க முடியாதா?
டெல்லி: ஐபிஎல் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஜியோ சினிமாவில் இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது. இதற்கிடையே அடுத்தாண்டு முதல் ஜியோ சினிமாவில் ஐபிஎல் ஒளிபரப்பப்படாது என்ற ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கும் தொடர் என்றால் அது ஐபிஎல் தான்.. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.

ஐபிஎல் 2025: அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அணி எந்த வீரர்களைத் தக்கவைக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை அக். 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் எந்த அணி எந்த வீரர்களைத் தக்கவைக்கும் என்பது குறித்து பலவித தகவல்களை இணையத்தில் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐபிஎல் போட்டிகள் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரிமிங் செய்யப்பட்டு வந்தது. ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க நாம் சந்தா கட்ட வேண்டும் என்ற நிலையே இருந்தது. அதேநேரம் கடந்த 2022ல் ஐபிஎல் ஸ்டிரிங் உரிமையை ஜியோ சினிமாஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து அனைவரும் ஜியோசினிமாஸில் இலவசமாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே அடுத்தாண்டு முதல் ஜியோ சினிமாஸில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷாக் தகவல்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் டிஸ்னியின் ஸ்டார் க்ரூப்பின் இந்திய பிரிவு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அதாவது ஹாட்ஸ்டார், ஜியோ என எல்லாம் ஒரே நிறுவனத்தின் கீழ் வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் அடுத்தாண்டு ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் மற்றும் விளையாட்டு தொடர்களும் இனி ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்: அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மாற்ற ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் உட்பட இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை ஜியோ பெற்றுள்ள நிலையில், அதே ஐசிசி தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் தான் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தையும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப ஜியோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நிறுவனங்களையும் இணைப்பது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டதாம். முதலில் ஒட்டுமொத்தமாக ஹாட்ஸ்டாரை நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் அனைத்து கன்டெண்டுகளையும் ஜியோ சினிமாவில் மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், ஹாட்ஸ்டாருக்கு தனி பிராண்டு இருப்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
ஜியோவில் என்ன தான் இலவசமாக ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டாலும் அதில் தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகம் இருப்பதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருந்தன. அதேநேரம் ஹாட்ஸ்டாரில் இதுபோல பெரிதாக எந்தவொரு சிக்கலும் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டே ஹாட்ஸ்டாரில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் மாற்ற ஜியோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இலவசம் தொடருமா: அதேநேரம் தற்போது ஜியோவில் இலவசமாக ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், அடுத்தாண்டு இலவசம் தொடருமா இல்லை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து எந்தவொரு தெளிவான அறிவிப்பும் இல்லை. இது ரசிகர்களுக்கு ஷாக் தகவலாக உள்ளது.












Click it and Unblock the Notifications