30 நாள் லாக்-இன்.! ஜாமர் மட்டுமின்றி செல்போனுக்கும் தடை.. பட்ஜெட்டிற்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகள்?
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடே எதிர்பார்க்கும் இந்த பட்ஜெட் உரை எப்படித் தயாரிக்கப்படும். இதைத் தயாரிக்கும் அதிகாரிகளுக்குத் தனிமைப்படுத்துதல், நோ செல்போன் உள்ளிட்ட என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் இந்தாண்டு வரும் சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நிர்மலா சீதாராமன்:
நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிப்பார். ஆனால் நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை என்பது வெறும் உரை இல்லை. இது நாட்டின் சாமானியன் முதல் கோடீஸ்வரர் வரை அனைவரது வாழ்க்கையையும் மாற்றிப் போடும் விஷயம். இதில் பல முக்கிய கொள்கை முடிவுகள், வரி விலக்கு தொடர்பான விஷயங்கள் என அனைத்துமே இருக்கும். இதன் காரணமாக பட்ஜெட் உரை பரம ரகசியமாகக் காக்கப்படும்.
பட்ஜெட் உரையைத் தயாரிக்கும் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பட்ஜெட் உரைக்காக அவர்கள் ஒரு மாதமாகவே தனிமையில் தான் இருக்க வேண்டும். அதிகாரிகள் அனைவரும் தங்க இடம் ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் அங்கேயே தான் ஒரு மாதமாகத் தங்க வேண்டும். இதற்காக நிதி அமைச்சகம் உள்ள நார்த் பிளாக்கில் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.
30 நாள் லாக் இன்
மிக மிக எமர்ஜென்சி என்றால் மட்டுமே வீட்டிற்குச் செல்ல முடியும். மற்றபடி யாருக்கும் வீட்டிற்குச் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. மேலும், செல்போன்களையும் கூட கண்டிப்பாக யாரும் பயன்படுத்தவே கூடாது. மெயில் உள்ளிட்ட எந்தவொரு தகவல் தொடர்பு சாதனத்தையும் கூட யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படும்.
பட்ஜெட் தயாரிக்கப் பயன்படும் கணினிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படும். லேன் (LAN) மூலம் அவை இணைக்கப்பட்டு இருக்குமே தவிர வேறு எந்தவொரு நெட்வோர்க்கிலும் அது இணைக்கப்படாது. இதன் மூலம் ஹேக்கிங் உள்ளிட்ட ஆபத்துகள் குறைக்கப்படும். மேலும், எந்த வழியிலும் தகவல் கசியக்கூடாது என்பதால் பல ஆண்டுகளாகவே நார்த் பிளாக் வெளியே ஜாமர்கருவிகளும் கூட பொருத்தப்படுகிறது. இதன் மூலம் பட்ஜெட் உரை தொடர்பான தகவல்கள் கசிவது தடுக்கப்படுகிறது.
மருத்துவக் குழு:
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது அதிகாரிகள் ஒரு மாதம் அங்கேயே தங்கும்போது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன செய்வது! வெளியே போக முடியாது என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாதா என நீங்கள் கேட்கலாம்.. இதற்கும் மத்திய அரசு மருத்துவக் குழு ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருக்கும். பட்ஜெட் தயாரிக்கும் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இந்த மருத்துவக் குழு தேவையான சிகிச்சையை அளிக்கும்.
இப்போதெல்லாம் பட்ஜெட் உரை முழுக்க முழுக்க இ- பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. டேப் மூலமாகவே பட்ஜெட் உரை படிக்கப்படுகிறது. ஆனால் முன்பு பட்ஜெட் உரை காகிதத்தில் தான் அச்சடிக்கப்படும். அதைத் தான் நிதியமைச்சர் வாசிப்பார். பட்ஜெட் உரையை பிரிண்ட் அடிக்கும் இடத்தில்கூட அது லீக் ஆகலாம் என்பதை மனதில் வைத்து நிதியமைச்சகத்திலேயே அச்சகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ கட்டுப்பாடு:
மேலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே நிதி அமைச்சக அலுவலகம் துணை ராணுவப்படை மற்றும் உளவுத் துறை கட்டுப்பாட்டில் வந்துவிடும். பார்வையாளர்கள் அனைவருமே தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் நாள் நெருங்க நெருங்கக் கெடுபிடிகள் அதிகம் ஆகும். கடைசி சில நாட்கள் யாருமே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பட்ஜெட் உரைக்கு முன்பு குடியரசுத் தலைவர் பிரதமர், கேபினட் அமைச்சர்களுக்கு மட்டுமே பட்ஜெட் உரையின் நகல் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications