பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் இருக்குமா? பவார் உறவினர் 'பொளேர்'
டெல்லி: பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினரும் கார்ஜத் ஜாம்கெத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான ரோஹித் ராஜேந்திர பவார்
கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்தது. இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படுகிறது. இதை எந்த ஒரு கட்சியும் தனித்து பெறவில்லை. இதனால் பாஜக-சிவசேனா ஏற்கெனவே கூட்டணி அமைத்ததாலும் இருவரது எண்ணிக்கையும் பெரும்பான்மையை தாண்டுவதாலும் அவை ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிவசேனா கோரிக்கை
ஆனால் முதலில் இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல்வராகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜக முதல்வராகவும் இருக்க வேண்டும் என கூட்டணி முன்னர் பேசியபடி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
சிவசேனா
ஆனால் பாஜகவோ அது போன்ற வாக்குறுதி ஏதும் அளிக்கப்படவில்லை என கூறுகிறது. இந்த இரு கட்சிகளின் மோதல்களால் மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
பால்தாக்கரே
இந்த நிலையில் இந்த மோதல் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினரும் கார்ஜத் ஜாம்கெத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான ரோஹித் ராஜேந்திர பவார்
தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் பல தலைவர்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளனர். அத்தகைய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பால்தாக்கரே.
பாஜக
அவரை நான் மதிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முக்கியமானது தேசிய அரசியலில் அவர் உயரம் தொட்டதுதான். தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் சரி சம பங்கு என சிவசேனாவுக்கு பாஜக வாக்குறுதி அளித்துவிட்டது. ஆனால் இப்போது தனது வாக்குக்கு எதிராக பாஜக நடக்கிறது.
அச்சம்
இதை பார்க்கும் போது பால்தாக்கரே தற்போது உயிரோடு இருந்திருந்தால் பாஜக இதுபோல் தைரியமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய மோதல்களை பார்க்கும் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- சிவசேனா கூட்டணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா என்ற அச்சம் எழுகிறது என்றார் ரோஹித்.