ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா.. நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சா்வதேச மையத்தில் நடைபெற்று வரும் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆா்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டார். இதைத்தொடா்ந்து பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாா் என்பரால் ஆா்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் ஆா்எஸ்எஸ்-இன் வரலாற்றுச் சாதனைகளை கெளரவிப்பது மட்டுமின்றி, இந்திய பண்பாட்டுப் பயணத்துக்கு இந்த அமைப்பு அளித்து வரும் பங்களிப்பு, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அந்த அமைப்பின் தூதுரை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது.
இந்த அமைப்பானது ஒழுக்கம், சேவை, கலச்சார விழிப்புணர்வு, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications