“அரசன் கடமையை செய்ய வேண்டும்..”பதிலடி கொடுக்க RSS தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்
டெல்லி: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரசன் தனது கடமையை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
அரசனாக இருப்பவரின் கடமை மக்களை பாதுகாப்பதுதான் என்று மோகன் பகவத் கூறியிருக்கிறார். இதன் மூலம், தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறைமுகமாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

விசுவ இந்து பரிஷத்தின் இணை பொதுச்செயலாளரான சுவாமி விஞ்ஞானானந்த் எழுதிய 'The Hindu Manifesto' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த மோகன் பகவத் மேற்குறிப்பிட்ட விஷயத்தை கூறியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் மோகன் பகவத் உரையாற்றியதாவது,
"நாம் பிறரை தாக்குவது கிடையாது. அதேபோல அவமானப்படுத்தாலும் இருந்து வருகிறோம். ஆனால், எதிர் தரப்பினர் வேண்டும் என்றே திருந்தாமல் தொடர்ந்து தீமைகளை செய்வார்கள் எனில், அரசன் தனது மக்களை பாதுகாக்க வேண்டும். இது அரசனின் கடமை. அரசன் தனது கடமையை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். ராவணனை அழித்ததை போன்று தீயவர்களை அழிக்க வேண்டும் என்பதே கடைசி வழி" என்று கூறியிருக்கிறார்.
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் மோகன் பகவத் இப்படி வலியுறுத்தியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியும், பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்தும் ஏற்கெனவே மத்திய அரசு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருப்பினும் ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் போர் எதற்கும் தீர்வாகாது என சிலர் பேசி வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் ராணுவ தாக்குதல் போன்ற உறுதியான நடவடிக்கை தேவை என்று மோகன் பகவத் மத்திய அரசுக்கு சிம்பாலிக்காக வலியுறுத்தியுள்ளார்.
உலக நடப்பை பற்றியும் மோகன் பகவத் இந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அதாவது, "உலகம் பல பொருளாதார முறைகளை பின்பற்றியும் அமைதியை அடையவில்லை. பலர் முதலாளித்துவத்தை(அமெரிக்கா, ஐரோப்பா) பின்பற்றினார்கள். சிலர் சோசலிசத்தை(சோவியத் ரஷ்யா) பின்பற்றினார்கள். ஆனால் அமைதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் பாரதம்(இந்தியா) புதிய இணக்கமான வளர்ச்சி பாதையை பின்பற்ற தொடங்கியிருக்கிறது. இது அமைதியை ஏற்படுத்தும்.
இப்போது இருக்கும் புவி மாசு, மக்களிடம் நீடிக்கும் அமைதியின்மை ஆகியவை பொருள்முதல்வாதத்தை தவறாக அமல்படுத்தியதால் வந்த விளைவு" என்று கூறியிருக்கிறார்.
பொருள் முதல்வாதம் என்பது ஒரு அரசியல் கொள்கையாகும். பெரும்பாலும் இடதுசாரி, சோசலிச நாடுகள் இந்த பொருளாதார கொள்கைளை பின்பற்றுகின்றன. இதன் மூலம் மோகன் பகவத் கம்யூனிச அமைப்பை, அதை பின்பற்றும் சீனா போன்ற நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன் முதலாளித்துவ நாடுகள், மத சார்பு இருக்கும் நாடுகள் கருத்து முதல்வாதம் எனும் கொள்கையை பின்பற்றும். பாஜகவின் அரசயில் நிலைப்பாடும் கருத்து முதல்வாதம் எனும் கொள்கைதான். இப்படி இருக்கையில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் தலைவர் கருத்து முதல்வாதம் பற்றி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications