விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தேசவிரோதிகள் முட்டுக்கட்டை: ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதில் தேசவிரோத சக்திகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என ஆர்.எஸ்.எஸ். இயக்க சாடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர்நிலை அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், 100 நாட்களை தாண்டி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால் தேசவிரோத சக்திகள் இதற்கு இடையூறாக இருக்கின்றனர்.
நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கின்றன கருத்துகளை சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஒரு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த விவாதங்களின் கீழ் உடன்பாடு ஏற்பட வேண்டும்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது. இந்த போராட்டம் தொடர வேண்டும் என்பதில் யாருக்குமே விருப்பமில்லை. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.