Putin India visit: இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.. டிரம்ப் வரிக்கு நடுவே.. மெல்ல மாறும் சர்வதேச அரசியல்!
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். ரஷ்யாவுக்குச் சென்றிருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணத்தை உறுதி செய்தார். இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா வரிகளை அறிவித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார். முதலில் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை அறிவித்த டிரம்ப், நேற்று கூடுதலாக 25% வரியை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலேயே வரி விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக உறவைப் பாதிப்பதாக இருக்கிறது.

புதின் இந்தியா வருகை
இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்த நிலையில், அப்போது இந்தத் தகவலை வெளியிட்டார். ஆகஸ்ட் 7ம் தேதி ரஷ்யாவின் இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இதைத வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகைக்கு இப்போது தேதிகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அஜித் தோவல் அறிவிப்பு
மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்குவுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்ய அதிபரின் பயணம் குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். மேலும், இந்தியா- ரஷ்யா இடையே இதற்கு முன் நடந்த உச்சி மாநாடுகளை இருதரப்பு உறவுகளில் முக்கியமான தருணங்கள் என்று அஜித் தோவல் குறிப்பிட்டார். இதன் மூலம் ரஷ்ய அதிபரின் பயணத்தின் முக்கியத்தவத்தை அவர் வலியுறுத்தினார்.
2022-ல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் இருமுறை சந்தித்தனர். முதலில் கடந்த ஜூலையில் 22ம் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டிற்காகப் பிரதமர் மோடி மாஸ்கோ சென்றபோது சந்தித்தனர். பிரதமர் மோடி 3வது முறையாக 2024ல் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுக்குச் சென்றது அதுவே முதல்முறை.
இந்தியா- ரஷ்யா உறவுகள்
அப்போது இந்தியா-ரஷ்யா உறவுகளை வலுப்படுத்துவதில் மோடி ஆற்றிய பங்களிப்பிற்காக ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான செயிண்ட் ஆண்ட்ரூ அப்போஸ்டல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அக்டோபரில் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றபோது இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்தனர்.
அதேநேரம் உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு புதின் இந்தியாவுக்கு வரவே இல்லை. உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதேநேரம் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக பதற்றங்கள்
இந்தியா ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவதால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் புதின் இந்தியா வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் புதின் பயணம் தொடர்பாக இதுவரை நமது மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதே காலகட்டத்தில், அதாவது பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 28ம் தேதி ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எனவே, ரஷ்ய அதிபர் பயணம் அதைப் பொறுத்து ஓரிரு நாட்கள் மாறலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications