"வருமான வரி.." பழைய வரி முறையை மொத்தமாக நீக்கும் மத்திய அரசு! அப்போ வரி விலக்கு எதுவுமே கிடைக்காதா?
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கலாகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளைப் பெற்று வருகிறது. இதற்கிடையே பழைய வருமான வரி முறையை மொத்தமாக ரத்து செய்துவிட்டு, முழுமையாக புதிய வரி முறையை கொண்டு வருமான மத்திய அரசுக்கு எஸ்பிஐ வங்கி பரிந்துரை அளித்துள்ளது.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போகும் கொள்கை ஆவணம் என்பதால் பட்ஜெட் மீது எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்தாண்டும் கூட மிடில் கிளாஸ் மக்கள் வரி விலக்கைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
கருத்துக் கேட்கும் மத்திய அரசு:
பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பரிந்துரைகளைப் பெறுவது வழக்கம். அதன்படி நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பிலும் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வருமான வரி தொடர்பாகவும் வரி விலக்குகள் தொடர்பாகவும் சில முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இப்போது நமது நாட்டில் பழைய வருமான வரி முறை, புதிய வருமான வரி என இரண்டு முறைகள் உள்ளன. தற்போதுள்ள பாஜக அரசு கொண்டு வந்தது தான் இந்த புதிய வரி முறை. சமீப ஆண்டுகளாக மத்திய அரசு இந்த புதிய முறைக்கே அதிக சலுகைகள் அறிவித்து வருகிறது. பழைய வருமான வரி முறையில் இருப்போர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தாலே வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், அதில் சேமிப்பு, காப்பீடு ஆகியவற்றுக்குப் பல வரி விலக்குகள் உள்ளன. புதிய முறையில் இதுபோல வரி விலக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக ரத்து செய்யப் பரிந்துரை:
இதற்கிடையே வரி செலுத்தும் முறையை எளிமையாக்கிவிட அனைத்து மக்களையும் புதிய வரி முறைக்கு மாற்ற வேண்டும் என எஸ்பிஐ பரிந்துரை அளித்துள்ளது. நமது நாட்டில் மொத்தம் 8.2 கோடி பேர் வரி செலுத்தி வரும் சூழலில், அவர்கள் அனைவரையும் எளிமைப்படுத்தப்பட்ட புதிய முறைக்கு மாற்றவும், பழைய வரி முறையை முழுமையாக நிறுத்தவும் எஸ்பிஐ பரிந்துரை அளித்துள்ளது. புதிய வரி முறைக்கு மாறுவதன் மூலம் ஒருவரால் ரூ.1.15 லட்சம் வரை வரிகளைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்குகளைப் பொறுத்தவரை என்பிஎஸ் எனப்படும் தேசிய பென்ஷன் சேமிப்பின் பங்களிப்பை ஆண்டுக்கு ரூ.50,000 இலிருந்து ஆண்டுக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்தவும், மருத்துவ காப்பீட்டையும் ஆண்டுக்கு ரூ. 25,000ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தவும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு:
மேலும், தற்போது ரூ.10-15 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 20% வருமான வரி விதிக்கப்படும் சூழலில், அதை 15% ஆகக் குறைக்கவும் எஸ்பிஐ வங்கி பரிந்துரைத்துள்ளது.. அதேபோல ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு தற்போதுள்ள அதிகபட்ச வரியான 30% வரியைத் தொடர்ந்து விதிக்குமாறு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மாற்றங்களை அமல்படுத்தினால் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுப் பழைய வரி முறையை மொத்தமாக ரத்து செய்யுமா இல்லை இரண்டு ஆப்ஷன்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்குமா என்ற கேள்விக்கு நமக்கு சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications