எஸ்பிஐக்கு குட்டு.. தேர்தல் பத்திர விவரங்களை வழங்க இன்று கடைசி நாள்! உத்தரவு பின்பற்றப்படுமா?
டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை, இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று பத்திர விவரங்களை வழங்குகிறது.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வெளியிட்டன.
ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், எனவே இதனை தடை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதை பெற்று தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதில் எஸ்பிஐ தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத எஸ்பிஐ மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, எஸ்பிஐ தரப்பிலிருந்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், எஸ்பிஐக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உத்தரவை செயல்படுத்த தவறினால் SBI அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
இந்நிலையில், இன்று மாலை தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜவுக்கு மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications