செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் வைத்தது ஏன் என உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி மனுக்களை தாக்கல் செய்த போது அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடைபெறும் ஊழல் வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் தமிழக அரசு செய்து வரும் தாமதத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்.
அது போல் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்க நடுநிலையான அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோப்பின் நகல், அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட விவரத்தையும் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ஆளுநர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வாஷிங்டன் தனசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பாலாஜி தாக்கல் செய்த அந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்கும் போது உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என அவ்வப்போது அறிக்கை பெற்று மேற்பார்வை செய்ய முடியும்
செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்தது ஏன்?
கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் 6 மாதமாக காலம் தாழ்த்தியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றது.
அதற்கு பதிலளித்த நீதிபதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி தனது பணியை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. அனைத்துக்கும் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்துக் கொண்டிருக்க முடியுமா என நீதிபதி ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications