உச்சநீதிமன்றம் அதிரடி.. சிஏஏ போராட்டக்காரர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பி தர உ.பி. அரசுக்கு உத்தரவு
டெல்லி: சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் உத்தர பிரதேச அரசு வசூலித்த பணத்தை திரும்ப வழங்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பில் 2019ல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்பட்டது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோ உள்பட சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. பொதுச்சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன.

விமர்சனம்
இதில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. வன்முறையாளர்களிடம் பணம் வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி பர்வைஸ் ஆரிப் டிட்டு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த கோர்ட் உத்தர பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.

கண்டனம்
அதாவது பொதுமக்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட்டது. மேலும் நோட்டீசை ரத்து செய்யாவிட்டால் நாங்கள் ரத்து செய்வோம். அத்துடன் நீதிமன்ற தீர்ப்புகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை உங்களுக்கு கூறுவோம்'' என நீதிபதிகள் கோபத்துடன் கருத்து தெரிவித்தனர். இதுதவிர உரிமை கோரல் தீர்ப்பாயங்களில் நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கூறினர்.

நோட்டீஸ்கள் வாபஸ்
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் ஒய் சந்திரசூட், சூர்யாகாந்த அமர்வு விசாரித்தது.
உத்தரபிரதேச அரசுசார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத் ஆஜரானார். அவர், ‛‛ உத்தர பிரதேச அரசு சார்பில் சிஏஏ போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக வழங்கப்பட்ட 274 நோட்டீஸ்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீர்ப்பாய முறையை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்படும்'' என தெரிவித்தார்.

பணத்தை திரும்ப வழங்க...
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்குங்கள். மேலும் உத்தர பிரதேசத்தின் அரசு, தனியார் சொத்து சேதமீட்பு சட்டம் 2020ன் புதிய நடைமுறையில் உங்களது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என கோர்ட்டு கூறியது.
முன்னதாக அலகாபாத் ஐகோர்ட்டு 2011ல் முகமது ஷூஜாவுதீன் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பொதுச்சொத்து சேதப்படுத்தியவர்களிடம் அதற்கான தொகையை வசூலிக்கும் நடைமுறையை குறைபாடுகளுடன் பின்பற்றி உத்தர பிரதேச அரசு நோட்டீஸ் வழங்கியது நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி புதிய நடைமுறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications