திடீர் திருப்பம்.. உன்னாவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு!
உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும் சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அது மட்டுமின்றி அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் நாடு முழுக்க மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் இதனால் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளார்.
இதற்கு நிறைய காரணம் உள்ளது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
அந்த பெண் உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீவிரமாக விசாரித்தார். நேற்று இந்த வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, 45 நாட்களில் இதில் தீர்ப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் கூறியது.
ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவசரமாக விசாரித்தார். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை தற்போது லக்னோவில் இருந்து டெல்லி கொண்டு வர முடியாது. அவரின் உடல்நிலை அதற்கு ஏற்றபடி இல்லை. அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது. அவர் செயற்கை சுவாசத்தில் உள்ளார், என்று அறிக்கையில் கூறப்பட்டது.
அதேபோல் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உன்னாவ் விபத்து தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது. அதில் தீவிரமாக விசாரணை நடக்கிறது. இதனால் தற்போது அவசரமாக விசாரணையை டெல்லிக்கு மாற்ற முடியாது. அது விசாரணையை பாதிக்கும். அதனால் உத்தரவை கொஞ்சம் தள்ளிப்போட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலைதான் முக்கியம். அதனால் அவர் லக்னோவிலேயே சிஆர்பிஎப் பாதுகாப்புடன் இருக்கட்டும். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். வழக்கை இப்போது டெல்லிக்கு மாற்ற வேண்டாம். ரேபரேலி சிறையில் உள்ள பெண்ணின் மாமாவை மட்டும் திஹார் சிறைக்கு மாற்றுங்கள்.
பெண்ணின் உடல் நிலையை அடிப்படையாக கொண்டு திங்கள் கிழமை வேறு உத்தரவை பிறப்பிப்போம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications