ஓ.பி.ரவீந்திரநாத் அப்பீல் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்- எம்.பி. பதவி பறிபோகிறது?
டெல்லி: அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது; இதனால் ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓ.பி.ரவீந்திரநாத். அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா எம்.பியான ஓபி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் வருமான உள்ளிட்ட விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துவிட்டார் என்பது மிலானி தொடர்ந்த வழக்கு.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து அண்மையில் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஓ.பி.ரவீந்திரநாத் தமது வேட்பு மனுவில் வருவாய் தொடர்பான விவரங்களை மறைத்துள்ளார்; ஆகையால் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது. இதனால் லோக்சபாவில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. பதவியும் பறிபோகும் நிலைமை உருவானது. இருப்பினும் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்கு ஆகஸ்ட் 4-ந் தேதி வரை அவகாசம் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனடிப்படையில் ஓபி ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தம்மையும் சேர்க்க கோரி திமுகவின் தங்க தமிழ்ச்செல்வனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். தங்களது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஓபி ரவீந்திரநாத் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓபி ரவீந்திரநாத்தின் எம்பி பதவி இயல்பாகவே ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் பறிபோகும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications