இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சோர்ஸ் கோட்-ஐ (Source code) வெளியிட தேர்தல் ஆணயத்திடம் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் லோக்சபா தொடங்கியுள்ளது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்கிற வழக்கு விசாரணையும் சூடுபிடித்துள்ளது.

இந்தியாவில் சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்கள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாகதான் நடைபெறுகிறது. ஆனால் இந்த இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மட்டுமல்லாது தேர்தலின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் ஒப்புகை சீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த சீட்டுக்கள் பதிவான வாக்குகளுடன் எண்ணப்படுவதில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் மனுதாரர் தரப்பில், “விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம்தான்” என வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில்,
“விவிபேட் இயந்திர மைக்ரோ கன்ட்ரோலர் தொடர்பாக சில சந்தேகங்கள் உள்ளது. மைக்ரோ கன்ட்ரோலர் ஒரு முறை மட்டும் ஃபுரோகிராம் செய்யப்பட்ட கூடியதா? மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் அல்லது விவிபேட் இயந்திரத்தில் மைக்ரோ கண்ட்ரோலர் இருக்கிறதா? வாக்குப்பதிவுக்கு பிறகு கட்டுப்படுத்தும் யூனிட்டுக்கு சீலிடப்படுமா? விவிபேட் இயந்திரங்கள் தனியாக வைக்கப்படுமா?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் டேட்டாக்கள் 40 நாட்கள் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 45 நாட்கள் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொழில்நுட்ப அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மைக்ரோ கன்ட்ரோலர் ஒரு முறை மட்டும் ஃபுரோகிராம் செய்யப்பட்ட கூடியதா என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் சந்தோஷ் பால், குறிக்கிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சோர்ஸ் கோட்(Source code) வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டார். இந்த கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் பதிலளிப்பதற்கு முன்னர், நீதிபதி கன்னா குறிக்கிட்டு சோர்ஸ் கோட் (Source code) வெளியிடப்படாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
“சோர்ஸ் கோட்-ஐ (Source code)பொது டொமைனில் வைக்கும் தருணத்தில், அதுவே தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது” என நீதிபதி கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு தீர்ப்புகாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications