பக்ரீத் பண்டிக்கைக்காக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: கேரளா அரசை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: பக்ரீத் பண்டிக்கைகாக கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த கேரளா அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் கேரளா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
நாட்டில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம் என்ற நிலை உள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வு
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொரொனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இன்று வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கேரளா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பி.கே.டி. நம்பியார் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை நீதிபதிகள் ஆர். எஃப் நாரிமன், பி.ஆ. கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது பி.கே.டி. நம்பியார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது 10.96% ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் கேரளாவில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது சரியானது அல்ல என்றார். இந்த வழக்கில் ஒரே நாளில் கேரளா அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, பக்த்ரீத் பண்டிகைக்காக கொரோனா கட்டுப்பாடுகளை கேரளா அரசு தளர்த்தியதை ஏற்க முடியாது; நியாயப்படுத்தவும் முடியாது. கட்டுப்பாடுகள் தளர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும்; அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவை மதித்து நடக்க வேண்டும்; கேரளா அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உ.பி. கன்வார் யாத்திரை
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் சிவாலயங்களுக்கு கங்கை நீரை கொண்டு வரும் கன்வார் யாத்திரைக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்திருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கன்வார் யாத்திரையை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்ய முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து கன்வார் யாத்திரையை அனுமதிக்கவில்லை என உ.பி. அரசு விளக்கம் தந்தது.

தளர்வுகளுக்கு எதிர்ப்பு
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தமது ட்விட்டர் பக்கத்தில், கன்வார் யாத்திரை தவறு எனில் பக்ரீத் பண்டிகைகளுக்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவும் சரியானது அல்ல என கூறியிருந்தார். மேலும் கேரளாவின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications