மோடிக்கு எதிரான புகாரை உடனே விசாரியுங்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரை உடனே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரை உடனே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவர் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.
இவர்கள் இருவரும் தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் பிரச்சாரம் அவ்வப்போது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

என்ன பேசினார்
முக்கியமாக பிரதமர் மோடி ஜாதி குறித்தும், மதம் குறித்தும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் வெறுப்பை உமிழும் வகையில் பேசுவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் இந்திய ராணுவத்தை தனது பிரச்சாரத்தில் விதிகளை மீறி பயன்படுத்தி வருகிறார்.இது அத்தனையும் தேர்தல் விதிமுறைப்படி தவறானது ஆகும். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

நடவடிக்கை இல்லை
ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்த வழக்கில் சுஷ்மிதா தேவ் சார்பாக வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி ஆஜரானார்.

என்ன விளக்கம்
இதில் இன்று விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடிக்கு எதிரான இரண்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டிலும் அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி குறிப்பிட்டார். ஆனால் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுஷ்மிதா தேவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி குறிப்பிட்டார்.

என்ன உத்தரவு
இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரை உடனே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க அடுத்த புதன் கிழமை வரை தேர்தல் ஆணையம் நேரம் கேட்டது. ஆனால் திங்கள் கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications