ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள்- சட்டசபைக்குள் நுழைய தடை கோரும் வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
டெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்க கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று விசாரிகக் உள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அப்போது சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
இதனிடையே அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களும் மீண்டும் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கியமாகினர். ஓபிஎஸ்- துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. அதில், இந்த விவகாரத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவெடுப்பார்; அவருக்கு உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கையும் முடித்து வைப்பதாக கூறியது. இருப்பினும் ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீது சபாநாயகர் கடந்த 3 மாதங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
டெல்லி மருத்துமனையில் அமித்ஷா அதிரடி விசிட்- சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்க உத்தரவு
இதனால் உச்சநீதிமன்றத்தை திமுக மீண்டும் நாடியிருக்கிறது. சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்குள் நுழைவதற்கு தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான பெஞ்ச் செவ்வாய்க்கிழமையன்று விசாரிக்க உள்ளது.
மணிப்பூர் வழக்கு
மணிப்பூரில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ. ஒருவரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்கவில்லை. சபாநாயகர் முடிவெடுக்கும் வரை அந்த எம்.எல்.ஏ.வை சட்டசபைக்குள் நுழைய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் அடிப்படையில் பாஜகவுக்கு தாவிய 7 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் நுழைய மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனடிப்படையில் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை கோரியுள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.