டெல்லி பள்ளியில் 11 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. அத்துமீறிய சீனியர்கள்.. மறைக்க முயன்ற ஆசிரியர்
டெல்லி: 11 வயது மைனர் சிறுமி பள்ளியிலேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் தலைநகர் டெல்லியில் நடந்து உள்ளது. அங்குப் பள்ளியிலேயே 11 வயது மைனர் சிறுமி பள்ளியிலேயே கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உ.பி காவல்துறை அலட்சியம்.. கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி தற்கொலை
புகார்
இந்த விவகாரம் குறித்து சிறுமி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இந்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய டெல்லி டிசிபி அம்ருதா குகுலோத், மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிர் ஆணையம்
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ எதுவும் கூறவில்லை என்று பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிக்கப் பள்ளி நிர்வாகமும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே டெல்லி மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்து உள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்ன நடந்தது
கடந்த ஜூலை மாதம் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுமி தனது வகுப்பறைக்குச் செல்லும்போது தெரியாமல் சீனியர்கள் மீது மோதியுள்ளார், உடனடியாக அவர் மன்னிப்பு கேட்ட போதிலும், சிறுமியை மிரட்டி கழிப்பறைக்கு இழுத்துச் சென்று, உள்ளே இருந்து கதவைப் பூட்டி உள்ளனர்.
மூடி மறைத்த ஆசிரியர்
அங்கேயே வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்து உள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமி தனது ஆசிரியரிடம் புகார் அளித்து உள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் உறுதி அளித்து உள்ளார். இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் மூடிமறைக்கப்பட்டது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை தேவை
இது குறித்து மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், "டெல்லியில் பள்ளிக்குள் மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக எங்களுக்குப் புகார் கிடைத்தது. பள்ளி ஆசிரியர் விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாகவும் சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். தலைநகரில் பள்ளிகள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்" என்றார்.
நோட்டீஸ்
இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் நகர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு டெல்லி போலீசாரிடம் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை டெல்லி போலீசாரிடம் கூறாமல் மூடிமறைத்த பள்ளி ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களைச் சமர்ப்பிக்குமாறும் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.