சீனா செல்லும் மோடி, புதின்.. பிரம்மாண்ட மாநாட்டுக்கு அழைத்த ஜின்பிங்.. அதிர்ச்சியில் டிரம்ப்
டெல்லி: இந்தியா மீதான அமெரிக்காவின் வரி நடவடிக்கை உலகளவில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்சிஓ) பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொள்ளனர்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து உலகளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல உலக நாடுகளுடன் டிரம்ப் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். முக்கியமாக இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகளை அவர் நேரடியாக விமர்சித்து பல நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.

அமெரிக்கா வரி
ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் இறங்கியது. சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்த காரணத்தால் இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் அதை கொள்முதல் செய்தனர்.
இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யா அந்தப் பணத்தை மீண்டும் போருக்கு பயன்படுத்துவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் விமர்சனம் செய்தார். இந்தியா, சீனா பொருட்களுக்கான அமெரிக்க வரியையும் அவர் உயர்த்தினார். அதிகபட்சமாக இந்தியா மீதான வரியை அவர் 50 சதவீதம் உயர்த்தியுள்ளார்.
சீனா - இந்தியா - ரஷ்யா
இதற்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதுவரை இந்தியா - அமெரிக்கா நெருங்கிய உறவிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா - சீனா இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் இந்த மாநாடு தியாஞ்ஜின் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சீனா அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ள இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
7 வருடங்களுக்கு பிறகு
மேலும் துருக்கி, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக மோடி கடந்து 2018 ஆம் ஆண்டு சீனா சென்றிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் சீனாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த மாநாட்டில் ஐநாவின் நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் உற்று கவனிக்கப்படும் மாநாடாக இது அமைந்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் நெருக்கம் காட்டுவது டிரம்புக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications