யாரெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவங்க? காங். ஆலோசனை கூட்டத்தில் ராகுல் கேள்வி- சீனியர் தலைவர்கள் ஷாக்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மது குடிப்பழக்கம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதனால் சில மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சோனியா கட்டளை
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள், மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள், மாநில கமிட்டிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜக- ஆர்.எஸ்.எஸ்.-ன் பொய் பிரசாரங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த பொய்களை கருத்தியல் ரீதியாக நாம் எதிர்கொள்ள வேண்டும். கட்சியில் ஒற்றுமையும் ஒழுக்கமும் மிகவும் அவசியமானது என வலியுறுத்தி இருந்தார்.

குடிப்பழக்கம்- ராகுல் கேள்வி
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களிடம் உங்களில் யாருக்கு எல்லாம் குடிப்பழக்கம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தியின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத சில மூத்த தலைவர்கள் தங்களது சங்கடத்தை முகங்களில் வெளிப்படுத்தினர். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, எங்கள் மாநிலத்தில் பல தலைவர்களுக்கும் குடிப்பழக்கம் இருக்கிறது என பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டார். யாருடைய பெயரையும் நவ்ஜோத்சிங் சித்து குறிப்பிடவில்லை.

மதுவிலக்கு- காங். நிலை
காங்கிரஸ் கட்சியில் மகாத்மா காந்தி காலத்தில் இருந்தே மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்கிற விதி பின்பற்றப்பட்டது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. அதிலும் போதைப் பொருட்கள், மது குடிப்பது ஆகியவை இல்லாதவர்கள்தான் உறுப்பினராக சேர முடியும் என கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
காங்கிரஸில் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக வரும் 14-ந் தேதி நாடு தழுவிய அளவில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications