விவாதமான ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி விவாகரத்து! மாற்றம் தேவை என எழுந்த பரபர கோரிக்கை! என்னாச்சு?
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு, மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் ஷிகர் தவான் வழக்கு தற்போது விவாதமாகி உள்ளது. அதோடு இந்தியாவில் விவாகரத்து சட்டத்தில் மாற்றம் தேவை என ஆண்கள் மற்றும் ஆண்களுக்காக குரல் கொடுப்போர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தற்போதைய உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வகையில் தனது பேட்டிங் திறனை மேம்படுத்தி வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் கடந்த 4ம் தேதி ஷிகர் தவானுக்கு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களாக ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி தொடர்பான பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் ஷிகர் தவானுக்கு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி செய்த கொடுமைகள் மற்றும் நீதிமன்றத்தில் மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து ஷிகர் தவான் விவாகரத்து கோரிய நிலையில் அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்த முக்கிய விஷயம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஷிகர் தவான் கடந்த 2012ம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே திருமணமாகி 2 மகளுக்கு தாயாக இருந்தார். இதையடுத்து அவர் தனது கணவரிடம் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2 மகள்களுடன் ஆயிஷா முகர்ஜி வாழ்ந்து வந்தார். இதையடுத்து தான் ஷிகர் தவான் ஆயிஷா முகர்ஜியை காதல் திருமணம் செய்தார். ஆயிஷா முகர்ஜி, ஷிகர் தவானை விட 10 வயது மூத்தவர்.
ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜிக்கு ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் ஜோராவர் தவான். இவரும் ஆஸ்திரேலியா குடியுமையில் உள்ளார். தொடக்கத்தில் ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி இடையே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆயிஷா முகர்ஜி தனது முதல் கணவரின் 2 மகள்கள், மகன் ஜோராவர் தவான் ஆகியோருடன் ஷிகர் தவானுடன் வாழ தொடங்கினார்.
அதன்பிறகு தான் மெல்ல அவர்களின் வாழ்க்கையில் இடி இடிக்க தொடங்கி உள்ளது. அதாவது ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை இந்தியாவுக்கு குடிபெயரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். அதோடு ஷிகர் தவானுடன் இந்தியாவில் வசிக்காமல் அவர் தனது 2 மகள்கள், மகன் ஜோராவர் தவான் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவிலேயே வசிக்க தொடங்கி உள்ளார். அவ்வப்போது மட்டும் இந்தியா வந்து சென்றுள்ளார்.
இது ஷிகர் தவானுக்கு பிடிக்கவில்லை. இதுமட்டுமின்றி ஷிகர் தவானிடம் பணம் கேட்டு அவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஷிகர் தவான் பெயரில் ஆயிஷா முகர்ஜி தனது பெயரில் ஆஸ்திரேலியாவில் சொத்துகள் வாங்கி வந்துள்ளார். இதுமட்டுமின்றி ஆயிஷா முகர்ஜியின் முதல் கணவரின் 2 மகள்களுக்கான படிப்பு செலவு உள்ளிட்டவற்றுக்கும் ஷிகர் தவானிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் ஷிகர் தவானுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் மனைவி ஆயிஷா முகர்ஜி அளித்த மனரீதியான தொல்லைகளை அவர் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு இருந்தார். இது ஷிகர் தவானுக்கு ஆதரவாக அமைந்தது. அதுமட்டுமின்றி விவாகரத்து வழக்கு விசாரணையின்போது ஆயிஷா முகர்ஜி தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதுவும் ஷிகர் தவானுக்கு சாதகமாக அமைந்தது.
இதையடுத்து தான் டெல்லி நீதிமன்றம் ஷிகர் தவானுக்கு மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உள்ளது. அதோடு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்று ஆயிஷா முகர்ஜியுடன் வசிக்கும் மகன் ஜோராவர் தவானை இந்தியா அழைத்து வந்து ஷிகர் தவானுக்கு காட்டவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஷிகர் தவான் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து ஷிகர் தவானுக்கு நீதிமன்றம் விவகாரத்து வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசும்பொருளாகி உள்ளது. அதாவது இந்தியாவில் விவகாரத்து தொடர்பான வழக்கில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம் என பலரும் கூறியுள்ளனர். ஆண்கள் மற்றும் ஆண்களின் நலன்விரும்பிகள் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் ஷிகர் தவானுக்கு எளிதில் விவாகரத்து கிடைத்தாலும் கூட அவர் பாதிக்கப்பட்டவர் என்பதை இந்திய சட்டம் ஏற்கவில்லை. ஷிகர் தவான் மட்டுமின்றி இந்தியாவில் பல ஆண்கள் இத்தகைய நிலையில் உள்ளனர். அதாவது மோசமான நடத்தை கொண்ட மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற முடியாமல் ஆண்கள் தவித்து வருகின்றனர். ஒரு வேளை விவாகரத்து கிடைத்தாலும் கூட அந்த ஆண்களை பாதிக்கப்பட்டவர்களா அங்கீகரிக்க சட்டம் என்பது இல்லை என பலரும் புலம்பி தவிக்கின்றனர்.
அதாவது இந்தியாவில் திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும்போது பரஸ்பரம் அவர்கள் பிரிந்து செல்ல விவாகரத்து வாங்கும் நடைமுறை உள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மனைவி தரப்பில் தொல்லைகள் கொடுக்கும்போது ஆண் விவாகரத்து கோருகிறார். இத்தகைய சூழலில் மனைவியால் ஆண்கள் பழிவாங்கப்படுகிறார்கள். குறிப்பாக சில பெண்கள் விவாகரத்து கொடுக்க மறுக்கிறார்கள். இல்லாவிட்டால் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்ய புகார்களை அளித்து கணவர்களை சிக்க வைத்து விடுகிறார்கள்.

குறிப்பாக இந்திய தண்டனை சட்டம் 498 ஏ பிரிவை கூறலாம். இந்த பிரிவின் கீழ் மனைவியை துன்புறுத்தியதாக கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றமே கூறியுள்ளது.
மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சணை தடுப்பு சட்டம் என்பது தற்போது ஆண்களுக்கு எதிரான பழிவாங்கும் சட்டமாக சில சந்தர்ப்பங்களில் மாறுவிடுகின்றன. ஆனால் மனைவி மீது நடவடிக்கை எடுக்கும்படியாக இப்படியான சட்டங்கள் ஆண்களுக்கு இல்லை. அதிர்ஷ்டவசமாக ஷிகர் தவான் வழக்கில் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அதோடு இந்தியா வர விரும்பவில்லை என்பதையும் ஆயிஷா முகர்ஜியின் மவுனம் மூலம் நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஷிகர் தவானுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இருப்பினும் கூட மனைவியின் துன்புறுத்தலால் ஷிகர் தவான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அங்கீகரிக்கும் வகையில் விவாகரத்தை தவிர்த்து வேறு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பல ஆண்களுக்கு விவாகரத்து வழக்கு என்பது எளிமையான ஒன்றாக இல்லை. இதனால் ஆண்கள் தேவையின்றி பயந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்தியாவில் விவாகரத்து செயல்முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அதாவது திருமண வாழ்க்கை கசந்தால் ஆண், பெண் ஆகியோர் தங்களின் மனைவி, கணவனை பிரிந்து செல்வதற்கான வாய்ப்பை ஒருசேர சட்டம் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications